வவுனியாவில் புலிகள்- ராணுவம் மோதல்: புதிய தலைவர் கோபி உட்பட 3 பேர் சுட்டுக் கொலை!
வவுனியா: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவராக சொல்லப்பட்ட கோபி உட்பட மூன்று பேர் ராணுவத்துடனான மோதல் ஒன்றில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக இலங்கை ராணுவம் அறிவித்துள்ளது.
2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் பின்னர் அவ்வப்போது விடுதலைப் புலிகள் இயக்கம் உயிர்ப்பிக்கப்படுகிறது என்று இலங்கை ராணுவம் கூறுவது வழக்கம். குறிப்பாக ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டம் நடைபெறும் காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் உயிர்ப்போடு இருப்பதாக காட்டுவதற்கு பல நாடகங்களை இலங்கை அரசு நிறைவேற்றும்.
இம்முறையும் அதேபோல் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த கோபி என்பவர்தான் அந்த இயக்கத்தின் புதிய தலைவர் என்றும் அவரைப் பற்றி தகவல் தருவோருக்கு சன்மானம் தரப்படும் என்று இலங்கை அரசு அறிவித்தது.
அத்துடன் கோபிக்கு அடைக்கலம் கொடுத்தார்கள் என்ற பொய்யான குற்றச்சாட்டில் 14வயது சிறுமி விபூசிகா உட்பட ஏராளமானோரை இலங்கை அரசு கைது செய்தது. மலேசியாவில் இருந்து நந்தகோபன் என்ற விடுதலைப் புலிகள் இயக்க பொறுப்பாளரை கைது செய்து நாடு கடத்திக் கொண்டு வந்தது இலங்கை அரசு.
அண்மையில் வெளிநாடு வாழ் புலம்பெயர் தமிழர்களையும் அவர்களது அமைப்புகளையும் இலங்கை அரசு பயங்கரவாதிகளாக அறிவித்து தடை செய்தது.
இதனிடையே தமிழீழ விடுதலைப் புலிகள், புலிகள் இயக்க ஆதரவாளர்கள் என்று கூறி 65 பேரை இலங்கை அரசு கடந்த 2 நாட்களில் கைது செய்து வைத்துள்ளது.
இந்நிலையில் வவுனியா நெடுங்கேணி என்ற இடத்தில் இன்று அதிகாலை இலங்கை ராணுவத்தினர் சந்தேகத்தின் பேரில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அப்போது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவரான கோபி, தேவியன், அப்பன் ஆகிய மூவரும் தப்பிச் செல்ல முயன்றனர். இதைத் தொடர்ந்து இருதரப்புக்கும் இடையே மோதல் நடந்தது. இந்த மோதலில் மூவருமே சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டனர் என்று இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் பிடிகேயர் ருவன் வணிகசூரியா அறிவித்துள்ளார்.
தற்போது மூவரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள நிலையில் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள 65 பேரின் கதி என்னவாகும் என்ற அச்சம் ஈழத் தமிழர்களிடையே எழுந்துள்ளது.
யார் கோபி?
கஜீபன் பொன்னய்யா செல்வநாயகம் அல்லது கோபி அல்லது காசியன் மாஸ்டருக்கு வயது 31. இலங்கையில் 2009ஆம் ஆண்டு இறுதி யுத்தம் முடிவடைந்த பின்னர் ராணுவத்திடம் சரணடைந்தார். பின்னர் தடுப்பு முகாமில் இருந்தார். அவர் அங்கிருந்து தப்பி கத்தார் நாட்டில் பணி புரிந்திருக்கிறார்.
பின்னர் ஐரோப்பாவுக்கு சென்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நெடியவன் பிரிவினருடன் இணைந்திருக்கிறார். பின்னர் இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை உயிர்ப்பிக்க நெடியவனே கோபியை அனுப்பி வைத்தார் என்கிறது தகவல்கள்.
கிளிநொச்சியில் சண்டை?
இதற்கு முன்னர் கடந்த 24-ந் தேதியன்று கிளிநொச்சியில் வீடு ஒன்றில் கோபி தங்கியிருப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து அந்த வீட்டை போலீசார் சுற்றி வளைத்திருக்கின்றனர். அப்போதும் கோபிக்கும் போலீசாருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றதாகவும் அதில் கோபி தப்பியதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்துதான் கைது நடவடிக்கைகள் அதிகரித்தன என்றும் இலங்கை ஊடகங்கள் கூறுகின்றன.
இன்றைய மோதலில் ராணுவ வீரர் பலி?
மேலும் இன்று காலை கோபி உட்பட மூவரும் மறைவாக இருந்த இடத்தை ராணுவத்தை வளைத்தது என்றும் அப்போது இருதரப்புக்கும் இடையே மோதல் நடைபெற்றதாகவும் இதில் ஒரு இலங்கை ராணுவ வீரர் கொல்லப்பட்டார் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் இதை இலங்கை ராணுவம் மறுத்துள்ளது. உயிரிழந்த ராணுவ வீரர் பாதுகாப்பு பயிற்சி ஒன்றின் போது தவறுதலாக உயிரிழந்தார் என்று தெரிவித்துள்ளது.