'சர்ச்சைக்குரிய' இந்திய அரசியல்வாதியாம் ஜெயலலிதா..சொல்வது இலங்கை அரசு வானொலி!
கொழும்பு: இலங்கை அரசுக்கு எதிராக இந்தியாவில் கடுமையான நிலைப்பாடு கொண்டிருந்த தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா ஊழல் வழக்கு சிறைக்குப் போயிருப்பதை இலங்கை அரசு ஊடகங்கள் முதன்மைப்படுத்தி செய்திகளை வெளியிட்டுள்ளன.
ஈழத் தமிழர் பிரச்சனையில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவையும் இலங்கை அரசையும் மிகக் கடுமையாக எதிர்த்துக் கொண்டிருந்தவர் ஜெயலலிதா. தமிழக சட்டசபையில் இலங்கைக்கு எதிராக தீர்மானங்களை அவர் நிறைவேற்றினார்.
இலங்கை வீரர்கள் தமிழகம் வருவதற்கு அவர் அனுமதிக்கவில்லை. தமிழக வீரர்கள் இலங்கை செல்லவும் அனுமதி அளிக்கவில்லை. இப்படி சிம்ம சொப்பனமாக இருந்த ஜெயலலிதா, சிறைக்குப் போனதால் மிக முக்கியத்துவம் கொடுத்து இலங்கை அரசு ஊடகங்கள் செய்திகளாக வெளியிட்டுள்ளன.
இலங்கை அரசால் நடத்தப்படும் தினகரன் நாளேட்டில் ஜெயலலிதா வழக்கு, தமிழக வன்முறைகள் பற்றி முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை அரசின் வானொலியான இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமோ, ஜெயலலிதாவை பற்றி செய்தி வெளியிடுகையில், "இந்தியாவின் சர்ச்சைக்குரிய" அரசியல்வாதி என்று சுட்டிக்காட்டி தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளது.