முஸ்லிம்களுக்கு ஆதரவு தெரிவித்த புத்த பிக்குவிற்கு கட்டாய 'சுன்னத்'? பொய் என்கிறது போலீஸ்
கொழும்பு: இலங்கையிலுள்ள இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட, புத்த பிக்கு ஒருவருக்கு தீவிரபோக்குகொண்ட பிக்குகள் சுன்னத் செய்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் தன்னைத்தான் தாக்கிக்கொண்டு பிக்கு பொய் புகார் கொடுத்துள்ளார் என்று குற்றம்சாட்டி, பாதிக்கப்பட்டவரையே போலீசார் கைது செய்துள்ளனர்.
இலங்கையில், புத்தமதத்தை தீவிரமான வகையில் பின்பற்றும் அமைப்பாக பலசேனா அறியப்படுகிறது. இதற்கு எதிராக புத்தர் கூறியபடி அமைதி மார்க்கத்தில் வாழ விரும்புவது, ஜாதிக பல சேனா அமைப்பு. இதன் பொதுச்செயலாளராக உள்ளவர் வட்டரக்க விஜித தேரர்.
இவரை சமீபத்தில், பலசேனா அமைப்பை சேர்ந்த கும்பல் கடத்தி சென்று தாக்கியதாகவும், பானதுறை என்ற இடத்தில் வைத்து, அவரது ஆண் உறுப்பு முன்தோலை வெட்டிவிட்டதாகவும் வட்டரக்க விஜித தேரர் போலீசில் புகார் தெரிவித்தார். இஸ்லாமியர்கள் சுன்னத் செய்வது கடமை என்பதால், முஸ்லிம்களுக்கு ஆதரவாக செயல்பட்ட தன்னையும் சுன்னத் செய்து இஸ்லாமியர் என எதிர்கோஷ்டி பிரகடனப்படுத்தியதாகவும் பிக்கு தெரிவித்தார்.
ஆனால் பிக்கு தன்னைத்தான் தாக்கிக்கொண்டு பெருவாரியாக உள்ள பவுத்த அமைப்பு மீது பொய் குற்றச்சாட்டை சுமத்துவதாக போலீசார் தெரிவித்துவந்தனர். இந்நிலையில் கொழும்பு சட்ட மருத்துவ அதிகாரி, பிக்கு உடலில் இருந்த காயங்களை ஆய்வு செய்து அளித்த அறிக்கையில், அவர் தன்னைத்தான் தாக்கிக்கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதையடுத்து போலீசாருக்கு பொய் தகவல்களை வழங்கியமைக்காக பிக்குவை போலீசார் கைது செய்தனர்.