போரில் உயிர் நீத்தவர்களுக்கு நினைவு தினம் அனுசரிக்க இலங்கை ராணுவம் தடை
விடுதலை புலிகளுக்கும், இலங்கை ராணுவத்தினருக்கும் நடந்த 37 ஆண்டுகால உள்நாட்டு போர் கடந்த 2009ம் ஆண்டு மே மாதம், 18ம்தேதி, பிரபாகரன் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டதும் முடிவுக்கு வந்தது.
அதன் ஐந்தாவது ஆண்டு நினைவு தினம் வரும் 18ம்தேதி அனுசரிக்கப்பட உள்ளது. இந்நிலையில் இலங்கை ராணுவ செய்தித்தொடர்பாளர், ரூவான் வணிகசூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
போரில் உயிர் நீத்த தமிழர்களின் நினைவு தினத்தை வெளிப்படையாக அனுசரிக்க கூடாது. கறுப்பு கொடி ஏற்றுதல், பேனர்கள் வைத்தல், விடுதலை புலிகளின் கொடிகளை பறக்கவிடுதல் உள்ளிட்ட வகையில் நினைவு தினத்தை அனுசரிப்பவர்கள் மீது தீவிரவாத தடுப்பு சட்டம் பாயும். அதே நேரம் போரில் இறந்த உறவினர்களுக்கு மதச்சடங்குகள் செய்துகொள்ளவும், வீட்டுக்குள் நினைவு தினத்தை அனுசரிக்க எந்த தடையும் இல்லை.
சிங்கள ராணுவம் போர் வெற்றி தின அணிவகுப்பை 18ம்தேதி தென் இலங்கையின் மட்டாரா பகுதியில் நடத்த உள்ளது. எந்த பேதமும் இன்றி நாட்டிலுள்ள அனைத்து குடிமக்களுக்கும் இந்த போர்வெற்றி சாரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.