புத்தர் உருவ பச்சை குத்திய பிரிட்டிஷ் பெண்ணை நாடு கடத்திய இலங்கை
கொழும்பு: புத்தர் உருவத்தை கையில் பச்சை குத்தியிருந்த பிரிட்டீஷ் பெண்ணை கைது செய்ததுடன் நாட்டை விட்டு வெளியேற்ற இலங்கை அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இச்சம்பவம் இலங்கை செல்ல விரும்பும் சுற்றுலா பயணிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தாமரை மலர் மீது புத்தர்
நவோமி மிஷேல் கோல்மென் என்ற பிரிட்டீஷ் பெண்மனி, திங்கள்கிழமை இந்தியாவில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்புக்கு விமானத்தில் சென்றார். விமான நிலையத்தில் அவரை குடியுரிமை அதிகாரிகள் சோதனையிட்டபோது அவரின் வலது கையில் தாமரை மலர் மீது புத்தர் அமர்ந்திருப்பது போன்ற உருவம் பச்சை குத்தப்பட்டிருப்பது தெரியவந்தது.
அன்பும் குற்றமா
இலங்கையை பொறுத்தளவில் புத்தருக்கோ, பவுத்தமதத்துக்கோ சிறிதளவு இழுக்கு ஏற்படும் செயலையும் அனுமதிப்பதில்லை. எனவே பச்சை குத்திக்கொண்ட குற்றத்திற்காக பிரிட்டீஷ் பெண்மணி கைது செய்யப்பட்டு நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.
நாட்டைவிட்டு வெளியேறு
அந்த பெண்ணை இலங்கையை விட்டே வெளியேற்றும்படி நீதிபதி உத்தரவிட்டார்.
நாட்டை விட்டு வெளியேற்றும் நடைமுறைகள் முடியும் வரை முகாம் ஒன்றில் அவர் தங்கவைக்கப்பட்டுள்ளார். அவருக்கு தேவையான உதவிகளை செய்து வருவதாக இலங்கைக்கான பிரிட்டீஷ் தூதரகம் தெரிவித்துள்ளது.
இவங்க இப்படித்தான்
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புத்தர் சிலையை முத்தமிட்டதற்காக பிரெஞ்சு சுற்றுலா பணிகள் மூவருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது. 2010ம் ஆண்டில் அமெரிக்க ராக் இசைக்கலைஞர் அகோன் இலங்கைக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. அவர் தனது ஆல்பம் ஒன்றில் புத்தர் சிலைக்கு முன்பாக பெண்ணை நடனமாடச் செய்து காட்சியமைத்திருந்ததால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது நினைவு கூறத்தக்கது.