'பிரிட்ஜ் ஆன் த ரிவர் க்வாய்': பாலத்தை மீண்டும் கட்டுகிறது இலங்கை!
கொழும்பு: 'பிரிட்ஜ் ஆன் த ரிவர் க்வாய்' ஆங்கிலத் திரைப்படத்தில் வரும் பாலத்தை மீண்டும் கட்டுவதற்கு இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது.
1957- இல் வெளியான திரைப்படம் 'பிரிட்ஜ் ஆன் த ரிவர் க்வாய்'. இத்திரைப்படமானது மரண ரயில் பாதை என்று வரலாற்றின் பக்கங்கள் வருணிக்கும் தாய்லாந்து- பர்மா ரயில் பாதை பற்றியது.
தாய்லாந்து- பர்மா ரயில் பாதை
இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பான் கை ஓங்கி இருந்த நிலையில் பர்மாவுக்கும் தாய்லாந்துக்கும் இடையே ரயில் பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
மரண ரயில் பாதை
இந்த ரயில் பாதையை கட்டமைக்க பிரிட்டிஷ் போர் கைதிகள் நிர்பந்திக்கப்பட்டனர். குறிப்பாக பல்லாயிரக்கணக்கான தமிழர்களை பலி கொண்டதுதான் இந்த மரண ரயில் பாதை.
பிரிட்ஜ் ஆன் த ரிவர் க்வாய்
இதை மையமாக வைத்து 1957ஆம் ஆண்டு பிரிட்ஜ் ஆன் த ரிவர் க்வாய் என்ற பெயரில் ஆங்கிலத்தில் படமெடுக்கப்பட்டது.
இலங்கையில் படப்பிடிப்பு
இப்படம் 2 ஆண்டுகாலம் இலங்கையில் படமாக்கப்பட்டது. அத்திரைப்படத்தில் இடம் பெறும் பாலம் கடைசியில் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. இத்திரைப்படத்துக்கு ஆஸ்கார் விருதும் கிடைத்தது.
இன்றும் அறிவிப்பு பலகை
இலங்கையின் கேகாலை மாவட்டம், கித்துல்கலையில் 'பிரிட்ஜ் ஆன் த ரிவர் க்வாய்' படம் இங்குதான் படமாக்கப்பட்டது என்ற அறிவிப்புப் பலகை இருக்கிறது.
மீண்டும் கட்டுகிறது இலங்கை
தற்போது இந்த பாலத்தை மீண்டும் கட்டுவது என்று இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
2ஆண்டில் கட்டிவிடலாம்
'பிரிட்ஜ் ஆன் த ரிவர் க்வாய் படத்தில் காட்டப்பட்டது போலவே பாலத்தை மீண்டும் கட்டுவதற்கு இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. 2 ஆண்டுகாலத்தில் இந்த பாலத்தைக் கட்டி முடிப்போம் என்று இலங்கை மின்சார வாரிய தலைமை அதிகாரி கமல் லக்சிறீ கூறியுள்ளார்.