ஐ.நா. விசாரணைக்கு ஒத்துழைக்க முடியாது: இலங்கை அரசு திட்டவட்ட அறிவிப்பு!!
கொழும்பு: இலங்கை மனித உரிமைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைய விசாரணைக்கு ஒத்துழைக்க முடியாது என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது.
கொழும்பில் வெளிநாட்டு செய்தியாளர்களிடம் அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல். பீரிஸ் கூறியதாவது:
ஐ.நாவுடனும், அனைத்துலக செஞ்சிலுவைக் குழு போன்ற சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து பணியாற்ற இலங்கை தயார்தான். ஆனால் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் மேற்கொள்ளும் மனித உரிமைகள் மீறல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது.
இலங்கையில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் விசாரணை நடத்துவதற்கு அதிகாரம் எதுவும் இல்லை. இந்த விவகாரத்தில் இலங்கையின் ஒத்துழைப்பு பற்றி எவரும் கேள்வி கேட்க முடியாது. அவர் ஒரு பக்க சார்பான நிலைப்பாடு கொண்டவர்.
இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் எவரும் இங்கு வரமுடியாது. அந்த விசாரணைக் குழுவுக்கு சட்ட அதிகாரத்தை வழங்க மாட்டோம். ஜெனிவாவில் இந்தியா நடுநிலை வகித்தது நல்லதாகப் போனது. அதை நாங்கள் மதிக்கிறோம்.
இவ்வாறு ஜி.எல். பீரிஸ் கூறினார்.