மீன்பிடிக்க இந்தியர்களுக்கு தற்காலிக அனுமதி.. சாமி "கோரிக்கை" .. நிராகரித்தது இலங்கை!
கொழும்பு: இலங்கை கடற்பகுதியில் தற்காலிகமாக கூட மீன்பிடிக்க இந்திய மீனவர்களுக்கு அனுமதி கொடுக்க முடியாது என்று அந்த நாட்டின் மீன்வளத்துறை அமைச்சர் ரஜிதா சேனரத்னே திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.
இலங்கை தலைநகர் கொழும்பில் இலங்கை ராணுவ அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில், பாஜகவை சேர்ந்த சுப்பிரமணியசாமி கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர் "மன்னார் வளைகுடாவில் இந்திய கடல் எல்லை பகுதியில் தரமான மீன்களும், இறால்களும் இல்லாமல் போய்விட்டது. ஏற்றுமதி செய்யக் கூடிய அளவிற்காக மதிப்பு மிக்க மீன்களும், இறால்களும் இலங்கை கடற்பகுதி பக்கத்தில்தான் காணப்படுகின்றன. இந்திய கடல் பகுதியில் மீன்வளம் பெருகுவதற்கு 3 வருடங்கள் ஆகும். எனவே, அதுவரை இந்திய மீனவர்களை தற்காலிகமாக இலங்கையின் கடல் எல்லை பகுதியில் மீன்பிடிக்க அனுமதிக்கவேண்டும்" என்று கோரிக்கை விடுத்து இருந்தார்.
இது குறித்து இலங்கை அரசின் மீன்வளத்துறை மந்திரி ரஜிதா சேனரத்னே கொழும்பில் நிருபர்களிடம் கூறுகையில், "இதுபோன்றதொரு கோரிக்கையை ஏற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு அறவே இல்லை. மேலும் இந்த விஷயத்தில் எங்களை யாராலும் கட்டாயப்படுத்த முடியாது" என்றார்.
சுப்பிரமணிய சாமியின் கோரிக்கைக்கு மன்னார் மீன்பிடிப்போர் சம்மேளனமும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது.
இந்திய மீனவர்கள் சட்டவிரோதமாக இலங்கை கடற்பகுதியில் மீன் பிடிப்பதால், எங்களின் வாழ்வாதாரமே அடியோடு அழிந்துபோய்விட்டது என்று இந்த சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்டின் சோய்சா குற்றம்சாட்டினார்.