நெடியவன் உள்ளிட்ட 96 பேரை கைது செய்ய இன்டர்போல் நோட்டீஸ்
கொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேச தலைவர் என்று கூறப்படும் நெடியவன் உட்பட 96 இலங்கையர்களை கண்ட இடத்தில் கைது செய்வதற்காக இன்டர்போல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த 96பேரில் 40பேர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் நெருங்கிய தொடர்புகளைக் கொணடவர்கள் என்றும் ஏனைய 56பேரும் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புகளைக் கொண்டவர்கள் எனவும் இலங்கை போலீஸ் ஊடகத் தொடர்பாளப் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அத்துடன் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் யுத்தம் நிறைவடைந்த காலப்பகுதி முதல் இன்றுவரை கைது செய்யப்பட்ட 100பேர் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
இதனிடையே புலிகள் இயக்கத்தின் சர்வதேச தலைவர் என்று கூறப்படும் நெடியவன் என்பவர் தற்போது நார்வேயில் மறைந்திருப்பதாக இலங்கை புலனாய்வுப் பிரிவுக்கு கிடைக்கப்பெற்றுள்ள தகவலை அடுத்தே இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாதுகாப்பு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உயிர்ப்பிக்க நெடியவன் முயற்சித்து வருவதாகவும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நெடுங்கேணியில் வைத்து இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்ட புலிகள் இயக்க உறுப்பினர்கள் மூவரும் நெடியவனின் ஆலோசனைக்கமையவே செயற்பட்டு வந்துள்ளனர் என்றும் இலங்கை புலனாய்வுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
தாக்குதல் அல்லது குண்டுத் தாக்குதல் ஒன்றின் மூலம், இலங்கையில் புலிகள் இயக்கத்தின் செயற்பாடுகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன என்பவை வெளி உலகுக்கு காட்டுவதையே அவர்கள் நோக்கமாகக் கொண்டு செயற்பட்டுள்ளனர் என்றும் புலனாய்வுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
புலிகள் இயக்கத்தை உயிர்ப்பித்து செயற்படுத்துவதற்கான நிதி திரட்டல் நடவடிக்கையின் பின்னால் நெடியவனே உள்ளார் என்றும் இவ்வாறு திரட்டப்படும் நிதியின் மூலம் புலிகள் இயக்கத்தினர் மறைந்திருப்பதற்கான வீடுகள் மற்றும் வாகனங்கள் செப்பனிடப்பட உள்ளன என்றும் தகவல் கிடைத்துள்ளதாக புலனாய்வுப் பிரிவு மேலும் கூறியுள்ளது
தமிழகத்தில் சிறையில் இருக்கும் 6 விடுதலைப் புலிகளையும் ஒப்படைக்க வேண்டும் என்று இன்டர்போல் மூலம் இலங்கை அரசு கேட்டுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.