இலங்கை வெளியுறவு அமைச்சர் பெரிஸ் இந்தியா வருகிறார்: சுஷ்மாவை சந்திக்கிறார்
கொழும்பு: இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல். பெரிஸ் அடுத்த வாரம் இந்தியா வருகிறார்.
அவர் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்திக்கிறார். இச்சந்திப்பின் போது, இலங்கைத் தமிழர் நலம், மீனவர் பிரச்சனை உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
முதலில் ஹைதராபாத் செல்லும் பெரிஸ் அங்கு சீமாந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவையும், தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர ராவையும் சந்திக்கிறார். ஆந்திரா, தெலுங்கானாவில் இலங்கையின் தொழில் முதலீடுகள் குறித்து விவாதிக்கவுள்ளார்.
11ம் தேதி டெல்லி செல்லும் பெரிஸ் அங்கு சுஷ்மா சுவராஜை சந்தித்துப் பேசுகிறார்.
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி அரசு பொறுப்பேற்ற பின் பெரிஸ் இந்தியா வருவது இது 2வது முறையாகும். முன்னதாக மோடியின் பதவியேற்பு விழாவுக்கு அதிபர் மகிந்த ராஜபக்ஷேவுடன் அவர் டெல்லி வந்தார்.
2002ம் ஆண்டு இலங்கையின் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் காலத்தில் இருந்தே நாயுடுவுக்கு இலங்கை அரசுக்கு நல்லுறவு நிலவுகிறது. இதையடுத்தே இலங்கையின் ஜவுளி உற்பத்தி நிறுவனமான பிராண்டிக்ஸ் விசாகபட்டிணத்தில் தொழிற்சாலையை ஆரம்பித்தது குறிப்பிடத்தக்கது.