நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உட்பட 16 ஈழத் தமிழர் அமைப்புகளுக்கு இலங்கை தடை!!
ஜெனிவாவில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேறியது. இந்த தீர்மானம் நிறைவேறியதால் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம், இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்த உள்ளது.
இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்பதில் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர் அமைப்புகள் தீவிரம் காட்டின. தற்போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டுவிட்ட நிலையில் ஆத்திரமடைந்துள்ள இலங்கை அரசு தமிழீழ விடுதலையை ஆதரித்து வெளிநாட்டில் இயங்கும் அத்தனை ஈழத் தமிழர் இயக்கங்களையும் ஒரு சேர தடை விதிக்க முடிவு செய்துள்ளது.
16 ஈழத் தமிழர் அமைப்புகள்
இலங்கை அரசால் வெளிநாட்டு தீவிரவாத அமைப்புகள் என்ற பட்டியலில் இடம்பெற இருக்கும் அமைப்புகள்:
1.தமிழீழ விடுதலைப் புலிகள்
2. தமிழர் புனர்வாழ்வுக் கழகம் (டி.ஆர்.ஓ)
3. தமிழர் ஒருங்கிணைப்புக் குழு.
4. பிரித்தானியத் தமிழர் பேரவை.
5. உலகத் தமிழர் அமைப்பு.
6. கனேடிய தமிழ் காங்கிரஸ்.
7. ஆஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ்.
8. உலகத் தமிழர் பேரவை.
9. தேசிய கனேடியத் தமிழர் பேரவை.
10. தமிழ்த் தேசிய பேரவை.
11. தமிழ் இளைஞர் இயக்கம்.
12. உலகத தமிழர் ஒருங்கிணைப்புக் குழு.
13. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்.
14. தமிழீழ மக்களவை.
15. உலகத் தமிழர் நிவாரண நிதியம்.
16. தலைமைச்செயலக குழு.
உருத்திரகுமாரன், நெடியவன்..
மேலும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நெடியவன், உலகத் தமிழர் பேரவையின் பாதிரியார் இம்மானுவேல், விடுதலைப் புலிகளின் விநாயகம் ஆகியோரே இந்த அமைப்புகளை முன்னின்று நடத்துவதாகவும் இலங்கை அரசு அறிவிக்க இருக்கிறது.
இந்த அமைப்புகள் மற்றும் நிர்வாகிகள் மீது தடை விதிக்கப்பட்டால் அவற்றுடன் தொடர்பு வைத்து கொள்பவர்களும் நிதி உதவிகளை பெறுவோரும் இலங்கையில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு தண்டிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.