இலங்கை போரில் அப்படி ஒன்னும் நிறைய பேர் காணாமல் போகலியே... சொல்வது கமிஷன் தலைவர்
கொழும்பு: இலங்கையின் உள்நாட்டு போரின்போது ஆயிரக்கணக்கான மக்கள் காணாமல் போயுள்ளனர். அதில் பெரும்பாலானோர் தமிழர்கள், அவர்களை கண்டுபிடித்து திரும்ப ஒப்படைக்கும்படி மக்கள் கோரிக்கைவிடுத்து வருகிறார்கள். சர்வதேச நாடுகளின் நெருக்கடியை தொடர்ந்து இதற்காக ஒரு 3 பேர் கொண்ட கமிஷனை அந்த நாட்டு அதிபர் மகிந்தா ராஜபக்சே அமைத்துள்ளார்.
குறை கேட்பு
கமிஷன் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி மேக்ஸ்வெல் பரனகமா நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஒரு வாரமாக, வடகிழக்கு பகுதியான மன்னார் மாவட்டத்தில் மக்களின் குறைகளை கேட்டறிந்தது மேக்ஸ்வெல் தலைமையிலான குழு.
பொய் குற்றச்சாட்டு
இதுகுறித்து மேக்ஸ்வெல் பரனகமா இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: போரில் அதிகப்படியான மக்கள் காணாமல் போனதாக தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டுவரும் போதிலும், உண்மை நிலவரம் அப்படியில்லை. குற்றம்சாட்டுபவர்கள் உண்மை நிலையை மிகைப்படுத்துகிறார்கள். உதாரணத்துக்கு, வடக்கு மாகாணத்தில் 3,300 பேர் காணாமல் போய்விட்டதாக குற்றச்சாட்டு கூறப்பட்டது. ஆனால், எங்கள் கமிஷனுக்கு அத்தனை புகார்கள் வரவில்லை.
ஒன்றரை லட்சம் டூ 312
மன்னார் பகுதியில் 1 லட்சத்து 47 ஆயிரம் பேர் காணாமல் போய்விட்டதாக கூறப்பட்டுவருகிறது. எங்கள் கமிஷனுக்கு வந்த புகார்களின் எண்ணிக்கை வெறும் 312 மட்டுமே. எனவே குற்றச்சாட்டுகளில் முழுமையாக உண்மையில்லை என்றே கருதுகிறேன்.
தமிழர்கள் நம்புகிறார்கள்
எங்கள் கமிஷன் மீது தமிழ் மக்களுக்கு நம்பிக்கையில்லை என்று கூறப்படும் குற்றச்சாட்டும் பொய்தான். எங்களை சந்திக்க திரளாக வரும் தமிழர்களின் எண்ணிக்கையை பார்த்தால் இதை புரிந்துகொள்ள முடியும். இதுவரை எங்கள் கமிஷனுக்கு 19 ஆயிரம் புகார்கள் வந்துள்ளன. இதில் 5600 புகார்கள் பெற்றோர்களிடமிருந்து தங்களது பிள்ளைகளை காணவில்லை என்று கூறி வந்துள்ளன.
வெளிநாடுகளில் துப்பு துலக்குகிறோம்
காணாமல் போயுள்ளதாக கூறப்படும் பலர் வெளிநாடுகளில் பத்திரமாக வசிப்பது குறித்த தகவலும் எங்களுக்கு கிடைத்துள்ளன. இலங்கை வெளியுறவு துறை, கடிதம் மூலமாக இங்கிருந்து தப்பி சென்றவர்கள் வசிக்கும் நாடுகளை தொடர்புகொண்டு அவர்களை பற்றிய விவரங்களை கேட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.