இலங்கை அரசை அழிக்கும் விஷக்கிருமி கோத்தபய ராஜபக்சே: அமைச்சர் கடும் தாக்கு
கொழும்பு: கோத்தபய ராஜபக்சேவும், பொதுபலசேனாவும் இலங்கை அரசை அழிக்கும் விஷக்கிருமிகளாக மாறிவிட்டதாக அமைச்சர் ஒருவரே குற்றம் சாட்டியுள்ளார்.
சமீபகாலமாக இலங்கை அரசுக்குள் ஏகப்பட்ட குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. எதிர்க்கட்சிகள் எழுச்சி பெற்றுள்ளன. அதே நேரம் ஆளும் கட்சிக்குள் ஒற்றுமையின்மை ஏற்பட்டுள்ளது.
கூட்டணியில் உள்ள இடதுசாரிக் கட்சிகள் பகிரங்கமாகவே அரசையும், அதன் மக்கள் விரோத நடவடிக்கைகளையும் விமர்சிக்க தொடங்கியுள்ளன.
இந்நிலையில் அரசின் பின்னடைவுகளுக்கு பொதுபல சேனா மற்றும் அதன் போஷகரும், பாதுகாப்புச் செயலாளருமான கோத்தபய ராஜபக்சே ஆகியோரே காரணம் என்று இலங்கை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்ட: சிறுபான்மை மக்களுக்கு எதிராக பொதுபல சேனா தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இதே போன்று நகர்ப்புறங்களில் வாழும் சிறுபான்மை மக்களை அங்கிருந்து அகற்றும் முயற்சியில் பாதுகாப்புச் செயலாளர் இறங்கியுள்ளார். இந்த நடவடிக்கைகள் ஐக்கிய தேசிய கட்சிக்கு சாதகமாக அமைந்துள்ளன.
ஜே.வி.பி.யின் எழுச்சி குறித்தும் அரசு கவனம் செலுத்த வேண்டும். இந்நிலையிலிருந்து மீண்டுவர வேண்டுமாயின் அரசு நிர்வாகம், பொருளாதார கொள்கைகள் என்பவற்றில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.