ராஜபக்சே தம்பி கோத்தபாயவை குறிவைக்கிறது யு.எஸ்! சாட்சியாக பொன்சேகா?
இது தொடர்பாக அமெரிக்காவின் தி டைம்ஸ் பத்திரிகையில் வெளியான செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
இலங்கை அதிபர் ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபாய ராஜபக்ச, இலங்கை ராணுவத்தில் பணியாற்றிய பின்னர் 1990ஆம் ஆண்டில் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்து அங்கு தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றினார்.
2005ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்சவுக்கு உதவுதற்காக கோத்தபாய மீண்டும் இலங்கை திரும்பிய போதும் அமெரிக்காவின் குடியுரிமையை தற்போதும் வைத்திருக்கிறார்.
தற்போது இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த போர்க்குற்ற விசாரணைகளில் இலங்கை அரசின் பங்கு உறுதி செய்யப்பட்டால் கோத்தபய ராஜபக்சவுக்கு பிரச்னை ஏற்படும்.
அமெரிக்க குடியுரிமை கொண்ட ஒருவர் போர்க்குற்றத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், 1996ஆம் ஆண்டு அமலாக்கப்பட்ட போர்க்குற்ற சட்டத்தின் கீழ் கோத்தபாய ராஜபக்ச கைது செய்யப்பட்டு தண்டனைக்கு உட்படுத்தப்படலாம்.
ஆனால் இந்த சட்டம் இதுவரையில் அமெரிக்காவினால் யாருக்கு எதிராகவும் பயன்படுத்தப்படவில்லை.
இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
பொன்சேகா சாட்சியம்?
இதனிடையே கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளின் சாட்சியாளராக முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகாவை அமெரிக்கா பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கான ரகசிய நடவடிக்கைகளை கொழும்பில் உள்ள தனது நாட்டு தூதரகத்தின் மூலமாக அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது.
முன்னர் சரத்பொன்சேகா அமெரிக்கா சென்ற போது இது தொடர்பாக அந்நாடு சில முயற்சிகளை மேற்கொண்டது. அப்போது ராஜபக்சேவுடன் இணக்கமாக பொன்சேகா இருந்தார். இதனால் அவர் ஒப்புக் கொள்ளாமல் இருந்தார்.
தற்போது ராஜபக்சே சகோதரர்களை பொன்சேகா கடுமையாக எதிர்ப்பால் மீண்டும் தமது முயற்சிகளை அமெரிக்கா முன்னெடுத்துக் கொண்டிருப்பதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.