இலங்கை மனித உரிமை மீறல்: ஐ.நா. விசாரணை குழுவுக்கு விசா வழங்க இந்தியா மறுப்பு
கொழும்பு: இலங்கையின் மனித உரிமை மீறல் புகார் குறித்து விசாரிக்க ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவி பிள்ளை நியமித்த விசாரணை குழுவுக்கு விசா வழங்க இந்தியா மறுத்துவிட்டது.
இலங்கையில் கடந்த 30 ஆண்டுகளாக ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே போர் நடந்து வந்தது. போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கை அரசு மனித உரிமைகளை மீறியதாக புகார் கூறப்பட்டது.
இந்த ஆண்டு மார்ச் மாதம் ஜெனீவாவில் நடந்த ஐ.நா. மனித உரிமை மாநாட்டில் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. குழு விசாரணை நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தியா மற்றும் இதர 4 தெற்காசிய நாடுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன.
எதிராக வாக்களித்த இந்தியா
இலங்கைக்கு ஐ.நா. விசாரணை குழுவை அனுப்புவதற்கு எதிராக இந்தியா வாக்களித்தது. சர்வதேச அமைப்புகள் மனித உரிமை புகார்கள் குறித்து ஒரு கூட்டுறவு முயற்சியாக அணுக வேண்டுமே தவிர, தண்டனை அளிக்கும் எண்ணத்தில் அணுக கூடாது என்றும் இந்தியா கருத்து தெரிவித்தது.
ஐ.நா. விசாரணைக்குழு
தீர்மானத்தின் அடிப்படையில் ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவி பிள்ளை கடந்த 7 ஆண்டுகளாக இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்த ஐ.நா. விசாரணை குழுவை நியமித்தார். இலங்கையின் போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றி விசாரணை நடத்த உள்ள இந்த ஐ.நா. குழுவில் 13 உறுப்பினர்களும், 3 நிபுணர்களும் உள்ளனர்.
இந்தியா மறுப்பு
இந்த ஐ.நா. விசாரணை குழு இந்தியாவுக்குள் வந்து விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து அவர்களுக்கு விசா வழங்க இந்தியா மறுத்துவிட்டதாக இலங்கை மனித உரிமை ஆணையர் பிரதிபா மகாணமாஹெவா கூறியுள்ளார். அதேபோல நேபாளம், வங்காளதேசம், பாகிஸ்தான், மாலத்தீவு ஆகிய நாடுகளும் இலங்கை மீதான சர்வதேச விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
முக்கியமான அடையாளம்
இந்தியா ஐ.நா. குழுவுக்கு விசா மறுத்திருப்பது இந்திய தலைமையிடம் இருந்து கிடைத்திருக்கும் மிகவும் முக்கியமான அடையாளமாக கருதுவதாகவும் இலங்கை மனித உரிமை ஆணையர் பிரதிபா கூறியுள்ளார்.
தனி நாடு கோரிக்கைக்கு எதிர்ப்பு
இந்த விசாரணைக்கு இலங்கை ஒத்துழைக்க மறுத்ததால், இலங்கையின் நெருங்கிய நாடுகளில் இருந்து விசாரணையை தொடங்க ஐ.நா. குழு முடிவு செய்தது. அந்த வகையில் இந்தியா மிகவும் முக்கியமான நாடு. ஆனால் இந்தியா விசாரணை குழுவை அனுமதிக்கவில்லை. பாகிஸ்தான், வங்காளதேசம், நேபாளம், மாலத்தீவுகள் ஆகிய நாடுகளும் இந்த நிலையையே எடுக்கும். தனி நாடு கோரிக்கையை அவர்கள் ஆதரிக்க விரும்பவில்லை என்றும் பிரதிபா கூறினார்.
தொலைபேசி மூலம் விசாரணை
இதனால் ஐ.நா. விசாரணை குழு தெற்காசிய நாடுகளுக்கு வெளியில் விசாரணையை நடத்த முடிவு செய்துள்ளது. உலகளவில் நியூயார்க், பாங்காக், ஜெனீவா ஆகிய 3 இடங்களில் மையங்களை அமைத்து அங்கிருந்து இலங்கையில் உள்ள சாட்சிகளிடம் இணையதளம், செயற்கைகோள் மற்றும் தொலைபேசி இணைப்புகள் மூலம் விசாரணையை நடத்தி வருகிறது.