ஐ.நா விசாரணைக் குழுவுக்கு விசா தர முடியாது.. ராஜ்பக்சே திட்டவட்டம்!
கொழும்பு: போர்க்குற்றம் தொடர்பாக விசாரிக்க ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் அமைத்துள்ள 3 உறுப்பினர் கொண்ட குழுவுக்கு இலங்கை வருவதற்கு விசா தர முடியாது என்று ராஜபக்சே இன்று திட்டவட்டமாக கூறி விட்டார்.
ஆனால் விசா தராவிட்டாலும் கூட விசாரணை தொடர்ந்து நடைபெறும். இலங்கைக்குப் போகாமலேயே கூட விசாரணையை நடத்த முடியும் என்று ஆணையத் தலைவர் நவி பிள்ளை ஏற்கனவே கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே 26 ஆண்டுகாலம் நடைபெற்ற போரில், இருதரப்பாலும் இழைக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டப்படும் குற்றங்கள் குறித்து விசாரிக்க, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம் தீர்மானித்துள்ளது. ஆனால், அந்த விசாரணைகளுக்கு ஒத்துழைக்க இலங்கை மறுத்து விட்டது.
விசாரணைக் குழுவுக்கு விசாவும் தர முடியாது என்றும் அது கூறி வருகிறது. இந்த நிலையில் இன்று கொழும்பில் வெளிநாட்டு செய்தியாளர்களைச் சந்தித்தார் ராஜபக்சே. அப்போது அவரிடம் இதுகுறித்துக் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த ராஜபக்சே, போர்க்குற்ற விசாரணைகள் நடத்த உள்ள ஐ.நா குழுவினருக்கு விசா வழங்கப்படாது என்று பதிலளித்தார்.