டீசல் விலை உயர்வு வருத்தம் அளிக்கிறது... ரத்து செய்யக்கோரி ஜெ. வேண்டுகோள்
சென்னை: தற்போது கொண்டு வரப்பட்டுள்ள டீசல் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது :-
வருத்தமளிக்கிறது...
சர்வதேச அளவில் பெட்ரோலியப் பொருட்களின் விலை சரிவடைந்துள்ள சூழ்நிலையில், பெட்ரோல் விலை, மொத்த நுகர்வோர் டீசல் விலை, மானியமில்லா சமையல் எரிவாயு சிலிண்டர் விலை, வணிக ரீதியான எரிவாயு சிலிண்டர் விலை ஆகியவற்றை குறைத்துள்ள எண்ணெய் நிறுவனங்கள், டீசல் விலையை மட்டும் லிட்டருக்கு 50 காசு உயர்த்தியுள்ளது வருத்தம் அளிக்கிறது.
மக்கள் ஏமாற்றம்....
முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் கடைபிடிக்கப்பட்ட முறையையொட்டியே எண்ணெய் நிறுவனங்கள் தற்போது டீசல் விலையை உயர்த்தியுள்ளன. ஆட்சி மாற்றம் ஏற்பட்டும் பெட்ரோலிய பொருட்களுக்கான விலை நிர்ணயக் கொள்கையில் எவ்வித மாற்றமும் இன்னமும் ஏற்படவில்லையே என்ற ஏமாற்றம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.
கூடுதல் வாகனக்கட்டணம்...
தற்போது எண்ணெய் நிறுவனங்களால் அறிவிக்கப்பட்டுள்ள டீசல் விலை உயர்வு காரணமாக, அனைத்துப் பொருட்களின் விலைகளும் உயரக்கூடும். தனியார் வாகனங்களில் பள்ளிகளுக்கும், அலுவலகங்களுக்கும் பயணிப்போர் கூடுதல் வாகனக் கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவர்.
விலைவாசி...
டீசல் விலையும், விலைவாசியும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்துள்ளன. விலைவாசியை கட்டுப்படுத்த வேண்டுமென்றால், டீசல் விலையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவேண்டியது அவசியம்.
தனிக்கவனம் தேவை....
எனவே பாரதப் பிரதமர், பெட்ரோலியப் பொருட்களின் விலை நிர்ணயக் கொள்கையில் தனிக் கவனம் செலுத்தி, அதனை மாற்றி அமைக்க வேண்டும் என்றும், முந்தைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட மாதா மாதம் டீசல் விலை உயர்வு என்ற கொள்கைக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
ரத்து செய்க...
மேலும், தற்போதைய விலை உயர்வினை ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்' என இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.