ஜெ. கைது: தீக்குளித்த மாணவி மரணம்: இதுவரை 17 பேர் உயிரிழப்பு
ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்ட செய்தியைக் கேட்ட உடன் மாரடைப்பு ஏற்பட்டு 10 பேரும், தற்கொலை செய்து கொண்டு 7 பேரும் உயிரிழந்துள்ளனர்.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிரான தீர்ப்பு வந்ததைத் தொடர்ந்து தமிழகத்தின் பல பகுதிகளிலும் மரணச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
மதுரை மாவட்டம் எழுமலை அருகே உள்ள வங்கிநாராயணபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். மனைவி அழகம்மாள். கூலித் தொழிலாளிகளான இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மகன்கள் கூலி வேலை செய்கின்றனர். இவர்களது மகள் நாகலட்சுமி அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.
காலாண்டு தேர்வு விடுமுறையால் வீட்டில் இருந்த அவர் சனிக்கிழமை டி.வி. பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஜெயலலிதாவுக்கு தண்டனை அறிவிக்கப்பட்ட தகவல் ஒளிபரப்பானது. இதை கேட்ட அவர் மனமுடைந்தார்.
மாணவி தீக்குளிப்பு
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை பெற்றோர் வேலைக்கு சென்றபின் வீட்டில் இருந்த அவர் மண்ணெண்ணெய்யை தன் உடலில் ஊற்றி தீயை பற்ற வைத்துள்ளதாகத் தெரிகிறது.
இதை கண்ட அருகில் வசிப்பவர்கள் உடனடியாக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மாணவி மரணம்
உடலில் பலத்த காயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், மாணவி நாகலட்சுமி சிகிச்சைப் பலனின்றி இன்று காலை 9.15 மணிக்கு உயிரிழந்தார்.
நலத்திட்டங்களால் பயன்
ஜெயலலிதா மீது நல்லெண்ணம் கொண்ட மாணவி நாகலட்சுமி, இலவச சைக்கிள் உள்ளிட்ட மாணவர்களுக்கு அரசு வழங்கும் நலத்திட்டங்களால் பயனடைந்தவர் என்று போலீஸார் தெரிவித்தனர்.
17 பேர் மரணம்
ஜெயலலிதாவிற்கு சிறைதண்டனை அறிவிக்கப்பட்ட உடன் தமிழகம் முழுவதும் 10 பேர் மாரடைப்பினால் உயிரிழந்தனர். 7 பேர் தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்துள்ளனர்.
2001 ல் தற்கொலை
கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயலலிதா பதவியிறங்கியபோதும் ஒரே நாளில் 3 பெண்கள் தீக்குளித்து உயிரை மாய்த்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.