நைட்டி அணிந்து வந்து ஓட்டு போட்ட தாத்தா, 102 வயதிலும் ஓட்டுப்போட மறக்காத பாட்டி
விருதுநகர்: விருதுநகரில் 102 வயது மூதாட்டி வாக்குப்பதிவு செய்து, ஜனநாயகக் கடமையை நிறைவேற்றியுள்ளார்.
விருதுநகர் நகராட்சிக்குட்பட்ட 7-வது வார்டில் வசிக்கும் சீனியம்மாள் என்ற அந்த மூதாட்டி கே.சி.எஸ்.தனுஷ்கோடி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் இன்று வாக்குப்பதிவு செய்தார்.
1950ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் அனைத்துத் தேர்தலிலும் தவறாமல் வாக்களித்து வருவதாக இந்த பாட்டி தெரிவித்தார்.
அரசியல் கட்சிகளின் எந்த அன்பளிப்பையும் பெறாமல், ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களித்து வருவதாக மூதாட்டி சீனியம்மாள் கூறியுள்ளார்.
நைட்டி அணிந்த முதியவர்
கரூர்மாவட்டம் அரவக்குறிச்சி வேலம்பாடி சொளந்திராபுரம் பூத் எண் 178 வாக்கு சாவடிக்குள் கட்சி கரைவேட்டி கட்ட அனுமதி மறுக்கபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது. பூத் ஏஜண்ட் உட்பட வாக்கு அளிக்க வருவோரும் கட்சிக்கரை கொண்ட வேட்டியை கட்டி வரக்கூடாது என வாக்கு சாவடி அலுவலர்கள் உத்தரவிட்டனர். திமுக தொண்டர் ஒருவர் இதுவரை கட்சி வேட்டியை தவிர வேறு வேட்டி இல்லாததால் செய்வது அறியாமல் தடுமாறிய முதியவர் தனது ஜனநாயக கடமை ஆற்ற வீட்டில் இருந்த எடுத்து வந்த நைட்டி அணிந்து வாக்களித்தார்.