திருவள்ளூர்: இரு கிராம மக்கள் மோதல் - 11 பேர் கைது
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே இருதரப்பினருக்கு இடையே நடைபெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக 11 பேரை போலீஸார் கைது செய்தனர்.
திருவள்ளூரை அடுத்த வெங்கல் காவல் எல்லைக்கு உள்பட்ட தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதல், கலவரமாக மாறியது.
இதில் இரண்டு காவல்துறையினர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். அனைவரும் சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த வழக்கு தொடர்பாக, புன்னப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த குருமூர்த்தி கொடுத்த புகாரின்பேரில் வெள்ளியூர் காலனியைச் சேர்ந்த நிசாந்த் (22), நாகராஜ் (22) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் பூச்சி அத்திப்பேடு அருகே உள்ள ஆரிக்கம்பேடு கிராமத்தைச் சேர்ந்த காத்தவராயன் என்பவர் அளித்த புகாரின்பேரில் தரிசு கிராமத்தைச் சேர்ந்த குழந்தைவேலு (31), கே.ஆனந்த் (28), எஸ்.ஆனந்த் (36), விஜி (24), கோபி (34), தயாளன் (37), பிரபு (23) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அகரம் கண்டிகையைச் சேர்ந்த வடிவேலு, புன்னப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் ஆகிய 2 பேர் என மொத்தம் 11 பேரை போலீஸார் கைது செய்து, திருவள்ளூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மோதல் நடைபெற்ற கிராமங்களான புன்னப்பாக்கம், வெள்ளியூர் காலனி, தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலை உள்ளிட்ட பகுதிகளில் 24 மணிநேரமும் போலீஸார் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.