கடல் வழியே கடத்தி கடத்தி வரப்பட்ட 12.5 கிலோ தங்கம் பறிமுதல்! இருவர் கைது!!
ராமநாதபுரம்: கடல் வழியே கடத்தி வரப்பட்ட 12.5 கிலோ தங்கம் ராமநாதபுரம் அருகே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த கடத்தலில் ஈடுபட்டதாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்திற்கு தங்க கட்டிகள் கடத்திவரும் நிகழ்வுகள் அன்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிக அளவு கடத்தல் தங்க கட்டிகள் சிக்கி வருகின்றன.
இதனால், மத்திய புலனாய்வு துறையினர் ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளில் தீவிர கண்காணிப்பு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை ராமநாதபுரம் மாவட்ட எல்லை பகுதியான ஓரியூர் வழியாக தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து வருவாய் புலனாய்வு அதிகாரிகள் அங்கு சோதனை நடத்தினர்.
அப்போது, ஓரியூர் விலக்கு ரோட்டில் ஒரு கார் சிக்கியது. அக்காரை சோதனை நடத்தியதில் தங்க கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. காரில் இருந்த 12.5 கிலோ தங்கத்தை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.
அந்த தங்க கட்டிகள் இலங்கையில் இருந்து கீழக்கரைக்கு படகு மூலம் கடத்திவரப்பட்டதாகவும் கார் மூலம் தொண்டி வழியாக சென்னைக்கு கொண்டு செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.