லோக்சபா தேர்தல் - தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் “144” தடை
புதுச்சேரி: லோக்சபா தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் நேற்று 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டது.இந்நிலையில் புதுச்சேரியிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணப் பட்டுவாடா செய்வதை தடுக்க முதல்முறையாக தமிழகத்தில் 144 தடை உத்தரவை தேர்தல் ஆணையம் அதிரடியாக பிறப்பித்துள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை 36 மணி நேரத்திற்கு இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும்.
இது தொடர்பாக புதுவை மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான தீபக்குமார் ''தேர்தல் அமைதியாக நடைபெற புதுச்சேரி தொகுதி முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவுபடி 5 பேருக்கு மேல் கூட்டமாக ஓரிடத்தில் கூடக்கூடாது. தடை உத்தரவை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறியுள்ளார்.
தமிழகம் மற்றும் புதுவை வரலாற்றிலேயே முதல் முறையாக இப்போதுதான் முழுமையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது முக்கியமானது.