தொடரும் இலங்கை அட்டூழியம்! மீண்டும் 15 தமிழக மீனவர்கள் கைது!!
ராமேஸ்வரம்: 38 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற மீனவர்களில் 15 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றிருப்பதால் மீனவர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்தியா, இலங்கை கடல் எல்லையான கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அடிக்கடி சிறைபிடித்து சென்று வருகின்றனர். அப்போது அவர்களது படகுகளையும் கொண்டு சென்று விடுகின்றனர்.
சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் அவ்வப்போது விடுவிக்கப்பட்டபோதும், அவர்களது படகுகள் மட்டும் விடுவிக்கப்படவில்லை. இந்த நிலையை கண்டித்தும், இலங்கையில் சிறை பிடிக்கப்பட்ட 64 விசைப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியும் ராமேசுவரம் மீனவர்கள் கடந்த ஜூலை 25ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டம் தொடங்கினர்.
38 நாட்கள் போராட்டம்
கடந்த 38 நாட்களாக வேலை நிறுத்தத்தை அவர்கள் நடத்தியபோதும், விசைப்படகுகள் விடுவிக்கப்படுவதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.
மீண்டும் மீன்பிடித் தொழில்
இதனை தொடர்ந்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு செப்டம்பர் 1ந் தேதி முதல் மீண்டும் மீன்பிடிக்க செல்வது என மீனவர்கள் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று ராமேசுவரத்தில் இருந்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.
நடுக்கடலில் தத்தளிப்பு
அவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது காற்றின் வேகம் பலமாக இருந்தது. இதில் 478 ஆம் எண் கொண்ட படகு எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து விட்டது. அதிலிருந்த 4 மீனவர்கள் கடலில் விழுந்து தத்தளித்தனர். இதனை 544ஆம் எண் கொண்ட படகில் இருந்தவர்கள் பார்த்து அவர்களை காப்பாற்றினர்.
சிறைபிடித்த சிங்களம்
பின்னர் அந்த படகில் 9 மீனவர்களும் கரை திரும்பி கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினர் அங்கு வந்து அவர்களை சிறைபிடித்தனர். படகுடன் சிறைபிடிக்கப்பட்ட 9 மீனவர்களையும் அவர்கள் நெடுந்தீவுக்கு கொண்டு சென்று சிறையில் அ டைத்தனர்
மேலும் 6 மீனவர்கள்
இதனிடையே தனுஷ்கோடி-நெடுந்தீவு இடையே கடலில் படகு கவிழ்ந்ததால் நடுக்கடலில் தத்தளித்த மேலும் 6 மீனவர்களையும் இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்றுள்ளது.
15 மீனவர்கள்
38 நாட்கள் போராட்டத்துக்குப் பின்னர் தொழிலுக்குப் போன நிலையில் மேலும் 15 மீனவர்களை சிங்கள கடற்படை செய்து இருப்பது தமிழக மீனவர்களை கடும் அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது.