வேலூர்: வீடு வாடகைக்கு எடுத்து விபசாரம் செய்த இருவர் கைது
வேலூர்: வேலூர் அருகே வாடகை வீட்டில் பெண்களை வைத்த விபச்சாரம் செய்த இருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த குமரப்பாநகர் பகுதியில் விபசாரம் நடைபெறுவதாக காட்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் காட்பாடி போலீசார் குமரப்பாநகரில் திடீர் சோதனை செய்தனர். அப்போது அங்கு பிரியா (வயது 30) என்பவர் வீடு வாடகைக்கு எடுத்து 2 இளம் பெண்களை வைத்து விபசாரம் நடத்தி வந்தது தெரியவந்தது.
அதை தொடர்ந்து விபசாரத்தில் ஈடுபட்ட சித்தூர் தோட்டப்பாளையம் மற்றும் வேலூர் விருப்பாட்சிபுரம் பகுதிகளை சேர்ந்த 2 இளம்பெண்களையும் மீட்டு பெண்கள் காப்பு விடுதிக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபசார விடுதி நடத்திய பிரியா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த கழிஞ்சூர் பகுதியை சேர்ந்த பாரதிமோகன் (38) ஆகியோரை கைது செய்தனர்.