சென்னை: பைப் வெடிகுண்டு வழக்கு மேலும் 2 பேர் கைது
சென்னை: புதுச்சேரியில் மத்திய அமைச்சர் நாராயணசாமியின் வீடு அருகே பைப் வெடிகுண்டு வைத்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுச்சேரியில் மத்திய அமைச்சர் நாராயணசாமியின் வீட்டின் அருகில் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு அடியில் கடந்த ஜனவரி 29-ம் தேதி பைப் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது. இதேபோல் மதுரை ரிலையன்ஸ் வளாகத்திலும் பைப் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக கியூ பிரிவு மற்றும் தேசிய புலனாய்வு போலீசார் விசாரித்து தமிழர் விடுதலைப் படை இயக்கத்தைச் சேர்ந்த 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.
அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் புதுவையில் மத்திய அமைச்சர் நாராயணசாமி வீட்டின் அருகில் பைப் வெடி குண்டு வைத்த வழக்கில் தொடர்புடைய 2 பேர் சென்னையில் இன்று கைது செய்யப்பட்டனர்.
கோட்டூர்புரத்தில் தங்கியிருந்த அவர்களை கியூ பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரின் பெயர் கலைலிங்கம் வயது 37. இவர் மதுரையில் கைது செய்யப்பட்ட திருச்செல்வத்தின் சகோதரர் என்பது தெரியவந்துள்ளது.
தமிழர் விடுதலைப் படையைச் சேர்ந்த இவர்கள்தான் புதுச்சேரியில் அமைச்சர் நாராயணசாமியின் காரில் பைப் வெடிகுண்டினை வைத்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
18 ஆண்டுகளாக திருச்செல்வமும், கலைலிங்கமும் கடந்த 18 ஆண்டுகளாக தலைமறைவு வாழ்க்கை வந்தனர். திருச்செல்வம் சில தினங்களுக்கு முன் மதுரையில் கைது செய்யப்பட்டான், கலைலிங்கம் சென்னையில் சிக்கியுள்ளான்.