நீலகிரி, வால்பாறையில் கன மழை: பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
வால்பாறை: கனமழை காரணமாக நீலகிரி, கூடலூர், பந்தலூர் வட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வால்பாறையிலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழையால் சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
கூடலூர், பந்தலூர், பகுதிகளில் மலைகிராமங்களில் கனமழை பெய்து வருவதையடுத்து இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சங்கர் உத்தரவிட்டுள்ளார்.
கோவை மாவட்டத்தில் உள்ள வால்பாறை வட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்துவருகிறது. கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக பெய்துவரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை இரவு முதல் பலத்த மழை பெய்கிறது. இதன் காரணமாக வால்பாறையில் உள்ள கல்லூரி மற்றும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு வியாழக்கிழமை விடுமுறை அளிக்க மாவட்ட ஆட்சியர் புதன்கிழமை உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை மீறிச் செயல்படும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் கூறியிருப்பதாக வால்பாறை வட்டாட்சியர் என்.நேரு தெரிவித்தார்.