அடுத்தடுத்து விமான விபத்துகள்: இது புதிரா இல்லை மாயன் காலண்டரின் கணிப்பா?
சென்னை: அடுத்தடுத்து நடக்கும் விமான விபத்துகளை ஏதேச்சையாக நடந்தவை என்பதா இல்லை மாயன் காலண்டர் கணிப்பு போன்று உலகம் அழிவை நோக்கி செல்கிறது என்பதா?
மத்திய அமெரிக்க நாடான காஸ்டா ரிகாவில் உள்ள மாயன் கோவிலில் இருக்கும் கல்வெட்டில் இந்த உலகம் 2012ல் அழியும் என்று எழுதப்பட்டிருந்தது. ஆனால் அதன்படி 2012ல் உலகம் அழியவில்லை.
ஆனால் தற்போது நடக்கும் விமான விபத்துகளை எல்லாம் பார்த்தால் ஒரு வேளை மாயன் கணிப்புப்படி உலகம் அழிவை நோக்கி செல்கிறதோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
எம்.ஹெச். 370
கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி மலேசியாவில் இருந்து 239 பேருடன் சீன தலைநகர் பெய்ஜிங் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 370 மாயமானது. விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்ததாகக் கூறப்பட்டாலும் இதுவரை ஒரு பாகம் கூட கிடைக்கவில்லை. இந்த விமானம் மாயமானது இன்னும் ஒரு புதிராகவே உள்ளது.
எம்.ஹெச். 17
கடந்த 16ம் தேதி நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச்.17 உக்ரைனில் ரஷ்ய எல்லை அருகே ஏவுகணை வீசித் தாக்கப்பட்டதில் 298 பேர் பலியாகினர்.
ஆனால் யார் ஏவுகணையை வீசித் தாக்கினார்கள் என்பது இதுவரை தெரியவில்லை.
ரஷ்ய அதிபர் புதினை குறிவைத்து தவறுதலாக மலேசிய விமானம் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
டிரான்ஸ் ஏசியா
தைவானில் இருந்து பெங்கு தீவுகளுக்கு கிளம்பிய டிரான்ஸ் ஏசியா விமானம் விபத்துக்குள்ளானதில் 48 பேர் பலியாகினர். வானிலை மோசமாக இருந்ததால் தான் விமானம் விபத்துக்குள்ளானது என்று கூறப்பட்டது. ஆனால் வானிலை நன்றாக இருந்ததாக சிவில் விமான போக்குவரத்து அமைப்பு தெரிவித்துள்ளது. ஆக விமானம் விபத்துக்குள்ளான காரணம் தெரியவில்லை.
ஏர் அல்ஜீயர்ஸ்
மேற்கு ஆப்பிரிக்க நாடான பர்கினோ ஃபாஸோவின் தலைநகர் ஓகடாகோவில் இருந்து கிளம்பிய ஏர் அல்ஜீயர்ஸ் விமானம் ஏஹெச்- 5017 மாலியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த 116 பேர் பலியாகினர். புயல் காரணமாக விமானம் வேறுபாதையில் செல்ல அனுமதி கேட்டுள்ளது. ஆனால் வானிலை நன்றாக தான் இருந்துள்ளது. விமானம் எதனால், எப்படி விபத்துக்குள்ளானது என்பது தெரியவில்லை.