மீனவர்கள் சாலை மறியல்: மாயமான பாம்பன் மீனவர்கள் 4 பேரும் மீட்பு!
ராமேஸ்வரம்: பாம்பனில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று, காணாமல் போன 4 மீனவர்களும் மீட்கப்பட்டுள்ளனர். இதனால் மீனவர்களின் போராட்டம் கைவிடப்பட்டது.
பாம்பனை சேர்ந்த மீனவர் ஜான்கென்னடிக்கு சொந்தமான விசைப்படகு ஒன்றில் ஜான்கென்னடி, ரீகன், டேனியல், வில்சன் ஆகிய 4 மீனவர்களும் கடந்த 25ஆம் தேதி மண்டபம் கோயில்வாடி கடற்கரை பகுதியில் இருந்து மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் மீன்பிடித்து விட்டு மறுநாள் (26ஆம் தேதி) காலை கரை திரும்பியிருக்க வேண்டும். ஆனால் அன்று மாலை வரை கரை திரும்பாததால் மீனவர்களின் குடும்பத்தினர் பதற்றம் அடைந்தனர். இதையடுத்து மீன்துறையில் புகார் செய்ததுடன் மாற்றுப்படகுகளில் காணாமல் போன மீனவர்களை தேடிச் சென்றனர்.
காணாமல் போன மீனவர்களை தேடி சென்றவர்கள் நேற்று (26ஆம் தேதி) நள்ளிரவு கடலில் தத்தளித்து கொண்டிருந்த ஜான்கென்னடி என்ற மீனவரை கண்டனர். உடனடியாக அவரை கடலில் இருந்து மீட்டனர். பின்னர் மற்ற 3 மீனவர்களையும் தொடர்ந்து தேடி வந்தனர்.
இதனிடையே காணாமல் போன மீனவர்களை இந்திய கடலோர காவல் படையினர் மற்றும் கடற்படையினர் மூலம் தேடுவதற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாம்பனில் மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இன்று (27ஆம் தேதி) காலை பாம்பன் சாலை பாலத்தின் முன்பு திரண்ட நூற்றுக்கணக்கான மீனவர்களும், பெண்களும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த ராமேஸ்வரம் வட்டாட்சியர் ஜீவரேகா, டி.எஸ்.பி. விஜயகுமார் மற்றும் அதிகாரிகள் மறியலில் ஈடுபட்ட மீனவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் காணாமல் போன மீனவர்களை தேட நடவடிக்கை எடுப்பதாக கடற்படை அதிகாரிகள் உறுதியளித்தால்தான் மறியலை கைவிடுவோம் என மீனவர்கள் கூறினர். இதனால் தொடர்ந்து நடந்த மறியலால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
ராமேஸ்வரத்திலிருந்து செல்ல வேண்டிய வாகனங்கள் ராமேஸ்வரத்திலும், ராமேஸ்வரத்திற்கு வர வேண்டிய வாகனங்கள் மண்டபத்திலும் நிறுத்தப்பட்டன.
இந்நிலையில் இன்று காலை 10 மணியளவில் காணாமல் போன மீனவர்களான ரீகன், டேனியல், வில்சன் ஆகிய மூவரும் இலங்கை நெடுந்தீவு கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து மீனவர்கள் தங்கள் மறியலை கைவிட்டனர்.
நெடுந்தீவில் கரை ஒதுங்கிய 3 மீனவர்களையும் உடனடியாக அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்களின் குடும்பத்தினர் அதிகாரிகளிடம் கோரிககை வைத்து கலைந்து சென்றனர். மீனவர்களின் போராட்டத்தால் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.