தேர்தல் முடிந்ததும் சென்னையில் 4 மணி நேரம் மின்வெட்டு – அதிகாரிகள் முடிவு
சென்னை: மாநிலம் முழுவதும் மக்களை வாட்டி வரும் கடும் மின்தடையை தவிர்க்க சென்னையில் மின்தடை நேரத்தை அதிகரிக்க மின் வாரிய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
தற்போது சென்னையில் தினமும் சுழற்சி முறையில் இரண்டு மணி நேரம் மின்தடை செய்யப்படுகிறது.
இதை நான்கு மணி நேரமாக அதிகரிக்கச் செய்ய வேண்டும் என மின் வாரிய அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.
அனுமதி மறுப்பு:
லோக்சபா தேர்தலை காரணம் காட்டி தமிழக அரசின் உயர் அதிகாரிகள் இதற்கு அனுமதி அளிக்க மறுத்து விட்டனர்.
மின் பற்றாக்குறை:
தமிழகத்தில் கடந்த ஆண்டுகளில் பல பன்னாட்டு நிறுவனங்கள் தொழில் துவங்கின. இதனால் 1000 மெகாவாட் கூடுதல் மின்சார தேவை ஏற்பட்டது. இதனால் இன்று வரை மின் பற்றாக்குறை நிலவுகிறது. இது தற்போது அதிகரித்தும் உள்ளது.
மெகாவாட் பொறுத்து மின்தடை:
இதை சமாளிக்க ஒரு நாளில் 200 முதல் 500 மெகாவாட் மின் பற்றாக்குறை ஏற்பட்டால் கிராம பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. 500 முதல் 1000 மெகாவாட் பற்றாக்குறை என்றால் கோவை, ஈரோடு, திருப்பூர், ஓசூர் போன்ற தொழில் நகரங்களில் மின்தடை செய்யப்படுகிறது. பற்றாக்குறை 1000 மெகாவாட்டை தாண்டினால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.
உற்பத்தி பாதிப்பு:
அனல் மின் நிலையங்கள், காற்றாலை போன்றவற்றின் மூலம் 2500 முதல் 3000 மெகாவாட் கூடுதல் மின்சாரம் கிடைத்தது. இதனால் சமீபத்தில் மின்தடை நேரம் குறைந்தது. ஆனால் தற்போது மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
அதிக மின்தடை:
மே மாதம் துவங்குவதற்கு 20 நாட்களுக்கு முன்னதாகவே வழக்கத்தை விட 1000 - 1500 மெகாவாட் மின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் சென்னை தவிர்த்து மற்ற இடங்களில் 6 முதல் 8 மணி நேரம் வரை மின்தடை செய்யப்படுகிறது. இது மற்ற மாவட்ட மக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
அதிகாரிகள் முடிவு:
இந்த மின் பற்றாக்குறையை சமாளிக்க சென்னையில் அமல்படுத்தப்படும் 2 மணி நேர மின்தடையை மூன்று அல்லது நான்கு மணி நேரமாக அதிகரித்து தமிழகம் முழுவதும் சமச்சீராக மின்தடை செய்ய மின் வாரிய அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.
ஆளும்கட்சி பாதிக்கப்படும்:
லோக்சபா தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில் தலைநகரில் மின்தடை நேரத்தை அதிகரித்தால் அது தேர்தலில் ஆளுங்கட்சிக்கு எதிராக அமையும் என்ற கருத்து நிலவுகிறது.
தேர்தல் முடிந்ததும் அமல்:
இதனால் மின் வாரிய அதிகாரிகளின் முடிவிற்கு தமிழக அரசு உயர் அதிகாரிகள் அனுமதி அளிக்க மறுத்து விட்ட தாக கூறப்படுகிறது. ஆனால் தேர்தல் முடிந்தவுடன் இந்த மின்வெட்டு திட்டம் அமல்படுத்தப்படும் என தெரிகிறது.
அடிக்கடி பழுது:
இதுகுறித்து எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "கோடை காலத்தில் அதிக வெப்பம் காரணமாக அனல்மின் நிலையங்களில் பழுது ஏற்படுவதால் மின் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. காற்றாலைகளில் கூடுதல் மின்சாரம் கிடைக்கும் வரை மின்தடை தவிர்க்க முடியாது "என்று கூறியுள்ளார்.