அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பிரசாரத்தில் விபத்து: 5 அதிமுகவினர் படுகாயம்
தேனி: தேனி அருகே அமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் காரை பின் தொடர்ந்து இரு சக்கர வாகனத்தில் சென்ற அதிமுகவினர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தனர்
தேனி லோக்சபா தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பார்த்திபனை ஆதரித்து இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் மோட்டார் சைக்கிளில் பேரணியாக சென்று இறுதிக்கட்ட பிரசாரம் மேற்கொண்டனர்.
அப்போது அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கம்பம் செல்வதற்காக வந்தார். இவரது பிரசார காரை பின் தொடர்ந்து இளைஞர் பாசறை அமைப்பினர் சென்றனர். உத்தமபாளையத்தை சேர்ந்த சாகுல் அமீது மோட்டார் சைக்கிளை ஓட்டினார். இதில் தேவாரத்தை சேர்ந்த பிரபஞ்சன் வண்டியின் பின்னால் அமர்ந்து இருந்தார்.
இவர்களை தொடர்ந்து தேவாரத்தை சேர்ந்த விவேக் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார். இவர்கள் அ.தி.மு.க. கொடிகளுடன் காக்கில்சிக்கையன்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் வந்த போது அந்த வழியாக சென்ற ஆட்டோ மீது மோதினர்.
இந்த விபத்தில் ஆட்டோவை ஓட்டிவந்த சாயத்தா, அதில் சவாரி செய்த சையது அபுதாகீர், இளைஞர் பாசறையை சேர்ந்த சாகுல் அமீது, விவேக் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.
விபத்து குறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.