சிவப்புக் கம்பள வரவேற்பு, விஐபி சேர்.... வாக்காளர்களுக்கு ராஜமரியாதை தந்த தேர்தல் ஆணையம்
சென்னை: வாக்காளர்களிடையே வாக்களிக்கும் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் சென்னையில் ஐந்து நவீன வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
வடசென்னை தொகுதிக்கு உட்பட்ட கொளத்தூர், அஞ்சுகம்நகர், 4-வது தெருவில் உள்ள மாநகராட்சி "உடற்பயிற்சி நிலையம்", மத்திய சென்னை தொகுதிக்கு உட்பட்ட நுங்கம்பாக்கம், எண் 1, லேக் ஏரியா, 4-வது குறுக்கு தெருவில் உள்ள மாநகராட்சி 9-வது மண்டல அலுவலகத்தில் வாக்குச்சாவடி எண் 120, 121, தென்சென்னை தொகுதிக்கு உட்பட்ட கிண்டி காலேஜ் ஆப் என்ஜினீயரிங், அடையாறு, காமராஜ் அவென்யூ, பாப்பன்சாவடியில் உள்ள சென்னை மேல்நிலைப்பள்ளி ஆகிய ஐந்து இடங்களில் இந்த மாதிரி வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
அந்த வாக்குச்சாவடியில் ஓட்டுப் போட வரும் வாக்காளர்களுக்கு ராஜ மரியாதை அளிக்கப் படுகிறது. அங்கு வாக்காளர்களைக் கவுரவிக்கும் வகையில் மேலும் என்னென்ன வசதிகள் செய்யப்பட்டிருந்தன.. இதோ ஒரு ரவுண்ட் அப்...
சிகப்பு கம்பள வரவேற்பு...
இந்த வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வரும் அப்பகுதி வாக்காளர்கள் சிகப்பு கம்பளம் விரிக்கப்பட்டு வரவேற்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து சாமியானா பந்தலில் போடப்பட்ட வி.ஐ.பி, இருக்கைகளில் அமரவைக்கப்பட்டனர். வாக்காளர்களின் எண்ணிக்கையை பொருத்து ஒரு பகுதிக்கு 100 இருக்கைகள் வீதம் 200 இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன.
குழந்தைகள் மையம்...
அதேபோல், குழந்தைகளோடு வருபவர்களின் வசதிக்காக வாக்குச்சாவடிக்கு வெளியே குழந்தைகள் மையம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அங்கு குழந்தைகளைப் பாதுகாப்பாக பார்த்துக் கொள்வதற்கு 2 ஆயாக்கள் அமர்த்தப்பட்டிருந்தனர். அங்கு குழந்தைகளுக்கு சாக்லெட் போன்றவையும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
செல்போன் கவுண்டர்...
மேலும், செல்போன் கொண்டுவருபவர்களிடம் செல்போன்களை பெற்றுக் கொண்டு டோக்கன் வழங்கிவிட்டு, ஓட்டுபோட்டு விட்டு திரும்பி வந்த உடன் மீண்டும் செல்போனை திரும்ப வழங்குவதற்காக "செல்போன் கவுண்டர்" ஒன்றும் ஏற்படுத்தப்பட்டிருந்தது.
வெயிலுக்கு இதமாக...
இந்த ஐந்து வாக்குச்சாவடிகளும் ஏர்கூலர் கொண்டு குளு குளு வசதி செய்யப்பட்டிருந்தது. ஓட்டுச்சாவடிக்கு வாக்காளர்கள் அழைத்து செல்லப்பட்டு ஓட்டு போட அனுமதிக்கப்பட்டனர். ஓட்டுபோட வருபவர்களின் கார் மற்றும் இரண்டு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு தேவையான இடவசதி, கழிப்பறை வசதி செய்து தரப்பட்டது.
சக்கர நாற்காலி வசதி...
மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள், முதியோர்களை ஓட்டுச்சாவடிக்கு உள்ளே அழைத்து வருவதற்கு தேவையான சக்கர நாற்காலி போன்ற வசதியும் ஏற்படுத்தப்பட்டது.
விழிப்புணர்வு சாவடிகள்...
இந்த மாதிரி வாக்குச்சாவடி குறித்து தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கூறுகையில் :-
வாக்குச்சாவடி மையத்தில் நீண்ட கியூவரிசை மற்றும் வாக்குச்சாவடி மையத்தில் ஏற்படும் அசம்பாவிதங்களால் பொதுமக்கள் சிலர் ஓட்டு போட வருவதில்லை. இதனால் ஓட்டு சதவீதம் குறைந்து விடுகிறது. இதனை தடுப்பதற்காகவும், வாக்காளர்களை ஓட்டுச்சாவடிக்கு வரவழைப்பதற்காகவும் சென்னையில் 5 இடங்களில் "மாதிரி வாக்குச்சாவடி மையம்" நவீன வசதிகளுடன் ஏற்படுத்தப்பட்டது.
ரூ 60 ஆயிரம் செலவில்....
பொதுவாக ஒவ்வொரு வாக்குச்சாவடி செலவிற்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் மாதிரி வாக்குச்சாவடிக்கு ரூ.60 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டது. இதில் வாக்காளர்களுக்கு தேவையான அனைத்துவிதமான அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டவரும் காலங்களில் இதேபோன்று அனைத்து வாக்குச்சாவடி மையங்களையும் அமைக்க வேண்டும் என்று வாக்காளர்கள் கூறவும் வாய்ப்பு உள்ளது' என்றனர்.