16 நிமிடங்களில் 369 ஆசனங்கள்.. 7 வயது குட்டிச் செல்லத்தின் அசகாய சாதனை!
கோவில்பட்டி: கோவில்பட்டியைச் சேர்ந்த 7 வயது மாணவி, 16 நிமிடங்களில் 369 ஆசனங்களைச் செய்து காட்டி அசத்தியுள்ளார்.
கோவில்பட்டியை சேர்ந்தவர் பாலமுருகன் - கிருஷ்ணவேணி. இவர்களது 2வது மகள் சக்திபிரபா (7). இவர் கோவில்பட்டியிலுள்ள தனியார் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறார்.
சிறு வயதிலேயே யோகா கற்றுத் திகழும் மாணவி சக்திபிரபாவின் சாதனை முயற்சி தூத்துக்குடி எஸ்.டி.ஆர்.மெட்ரிக்குலேஷன் பள்ளி, சுவாமி விவேகானந்தா யோகா- ஸ்கேட்டிங் கழகம் சார்பில் இன்று நடந்தது.
அரிமா சங்கத்தின் சார்பில்
பள்ளி முதல்வர் டயானா சிவக்குமார் தலைமை வகித்தார். கோவில்பட்டி டெம்பிள்சிட்டி பட்டயத்தலைவர் முருகேசன் முன்னிலை வகித்தார். அரிமா சங்க மாவட்ட தலைவர் கிங்ஸ்டன் சாதனை முயற்சியை துவங்கி வைத்தார்.
சூரிய நமஸ்காரத்துடன்
மாணவி சக்திபிரபா சூரிய நமஸ்கார ஆசனத்துடன் தனது சாதனை முயற்சியை துவங்கி, மகாமுத்திரா, பத்ராசனம், நடராஜ் ஆசனம், ஆஞ்சநேயா ஆசனம் என 369ஆசனங்களை குறிப்பிட்ட நிமிடங்களுக்கு முன்னதாகவே செய்து வியக்க வைத்தார்.
2 வருடமாக
இதுகுறித்து மாணவி சக்திபிரபா கூறியதாவது, யோகா பயிற்சியாளரான சுரேஷ்குமார் மாஸ்டரிடம் பயிற்சி பெற்றேன். 2வருடங்களாக தொடர்ந்து பயிற்சி எடுத்துவரும் என்னால் இப்போது கூட குறைந்தது 450ஆசனங்களை தொடர்ந்து செய்யமுடியும் என்றார்.
பரிசு வழங்கி பாராட்டு
சாதனை மாணவி சக்திபிரபாவிற்கு பாபாசாய் ராஜாராம், சிவதமிழவன் ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டினர். இதில், சுவாமி விவேகானந்தா ஸ்கேட்டிங் கழக நிறுவனர் சுரேஷ்குமார், யோகா பயிற்சியாளர்கள் பார்த்தசாரதி, ஜோசப்ராஜ், சௌந்தரவள்ளி, செஸ் பயிற்சியாளர்கள் ஹேமலதா, விவேக், மாணவியின் தாயார் கிருஷ்ணவேணி, பள்ளி ஆசிரியை, ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில், ஆசிரியை சண்முகசுந்தரி நன்றி கூறினார்.