கல்வி மாவட்டம் நெல்லையின் அவலம்: 80 அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகளே இல்லை...!
கல்வியில் சிறந்து விளங்கும், புகழ் பெற்ற கல்வி நிறுவனங்களை உள்ளடக்கிய நெல்லையில் இப்படி ஒரு அவல நிலை என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
சுற்றுச் சுழல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த கோரி தொடரப்பட்ட பொது நல வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ராதாகிருஷ்ணன், தீபக் மிஸ்ரா ஆகியோர் அதிரடியாக கடந்த 3.10.2012ல் தீர்ப்பளித்தனர்.
அதில் குடிநீர், கழிவறை, வகுப்பறை சுற்றுசுவர் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாத பள்ளிகளில் 6 மாதங்களுக்குள் அவற்றை ஏற்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இதையடுத்து மனித உரிமை கல்வி மற்றும் காப்புக்கான இயக்குனர் ரவிக்குமார் தலைமையிலான குழுவினர் நெல்லை மாவட்டத்தில் ஆலங்குளம், கடையநல்லூர், சுரண்டை, தென்காசி, சங்கரன்கோவில், அம்பை ஆகிய 7 ஓன்றியங்களில் உள்ள 80 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த குழுவில் 7 பேர் இடம் பெற்றிருந்தனர். கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி தொடர்ந்து 5 மாதங்கள் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் 34 பள்ளிகளில் குடிநீர் வசதியே இல்லை. வசதி இருக்கும் பள்ளிகளில் இரும்பு டிரம் மற்றும் சுகாதாரமற்ற தொட்டிகள் மட்டுமே இருந்தன. இவற்றில் பல தொட்டிகளில் தண்ணீரே இல்லை. 49 பள்ளிகளில் கழிப்பிட வசதி அறவே இல்லை.
இந்த பள்ளிகளில் விளையாட்டு மைதானமும் இல்லை. 29 பள்ளிகளில் வகுப்பறை தட்டுபாடு உள்ளது. 38 பள்ளிகளில் காம்பவுண்ட் சுவர், 5 பள்ளிகளில் சமையலறை இல்லை. குழந்தைகளுக்கு சத்துணவை வீடுகளில் தயாரித்து கொண்டு வந்து கொடுக்கின்றனர்.
மேலும் பல பள்ளிகளில் சமையலறைகள் சாக்கடைகள் சூழ அமைந்துள்ளன என்று ஆய்வில் அதிர்ச்சி தகவல்களை தெரிவிக்கின்றன.