நெல்லை: பறக்கும் படையினரை திகைக்க வைதத டிபன் பாக்ஸ்குகள்
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் பறக்கும் படையினர் மேற்கொண்ட சோதனையில் 900 டிபன் பாக்ஸ்கள் பிடிபட்டன.
நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் செக்போஸ்டில் போலீசார் வாகன சோதனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் 4 அட்டை பெட்டியில் 900 டிபன் பாக்ஸ்கள் இருப்பது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.30 ஆயிரத்திற்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.
காரில் இருந்தவர்களிடம் மானூர் வட்டார வளர்ச்சி அலுவலர் உமா சங்கர் தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது சாத்தான்குளத்தில் நடக்கும் சடங்கு நிகழ்ச்சிக்காக உறவினர்களுக்கு வழங்கும் பொருட்டு பெயர் பொறிக்கப்பட்ட டிபன் பாக்ஸ்களை மதுரையில் இருந்து கொண்டு செல்வதாக அவர்கள் தெரிவித்தனர்.
ஆனால் அதற்கான பில் எதுவும் அவர்கள் வசம் இல்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து டிபன் பாக்ஸ்களை திறந்து பார்த்த அதிகாரிகள் அதில் ஒன்றும் இல்லை என்று உறுதி செய்த பின்னர் அதை நெல்லை தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்று அங்குள்ள ஒரு அறையில் வைத்து பூட்டி சீல் வைத்தனர்.
வாகன சோதனையில் 30 கிலோ தங்க கட்டிகள் பிடிப்பட்ட சம்பவம் அடங்குவற்குள் டிபன் பாக்ஸ்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் டிபன்பாக்ஸ்க்குள் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வைத்து விநியோகம் செய்தவர்கள் இருதினங்களுக்கு முன்னர் போலீசார் கைது செய்தனர். அதேபோல இந்த டிபன்பாக்ஸ்களும் பணம் விநியோகம் செய்ய கொண்டு போகப்படுகிறதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.