”ஹப்பா!! சென்னைல மொத்தமா 96 ஆயிரம் 'முதல் முறை' வாக்காளர்கள்!”
சென்னை: மக்களவைத் தேர்தலில் சென்னை மாவட்டத்துக்குள்பட்ட 3 மக்களவைத் தொகுதிகளிலும் மொத்தம் 96 ஆயிரத்து 823 பேர் முதல் முறையாக வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.
வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை ஆகிய மூன்று தொகுதிகளில் மொத்தம் 37 லட்சத்து 75 ஆயிரத்து 380 வாக்காளர்கள் உள்ளனர்.
இதில் 18 முதல் 19 வயது வரை உள்ள முதல் முறை வாக்காளர்கள் 96 ஆயிரத்து 823 பேர்.
பதற்றம் நிறைந்த சாவடிகள்:
சென்னை மாவட்டம் முழுவதும் 3337 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் 255 வாக்குச் சாவடிகள் பதற்றம் நிறைந்தவை. இவற்றில் 125 உதவி காவல் ஆய்வாளர்கள், 250 சென்னை மாநகர காவல் படையினர் மற்றும் 400 மத்திய ஆயுத காவல் படையினர் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
"ஏசி" வசதியுடன் சாவடி:
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மின்வசதி குடிநீர் கழிப்பிட வசதி ஆகிய அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வாக்காளர்களுக்காக நிழற்பந்தலும் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் ஏசி வசதியுடன் கூடிய 5 மாதிரி வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டன.
இணையதள கண்காணிப்பு:
வாக்குப்பதிவை இணையதளம் மூலம் நேரடியாக கண்காணிக்க 1280 வெப் கேமிராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. 640 வாக்குச்சாவடிகளில் ஆஃப்லைன் மூலம் இணையதளம் இல்லாமல் நிகழ்வுகளை பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சிறப்பு காவல் படை:
வாக்குப்பதிவுக்காக மொத்தம் 21 ஆயிரத்து 147 அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பாதுகாப்புப் பணிக்காக 15 ஆயிரம் சென்னை மாநகர போலீஸாரும் 400 மத்திய ஆயுத படை போலீஸாரும் 2400 ஊர்க்காவல் படையினரும் பயன்படுத்தப்பட்டனர். தமிழ்நாடு சிறப்பு காவல் படையை சேர்ந்த 200 பேர் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டனர்.