ஆட்டுக்குட்டிக்கு பால் கொடுக்கும் நாய்- செங்கோட்டையில் ஒரு அதிசயம்
செங்கோட்டை: செங்கோட்டையில் நாய் ஒன்று ஆட்டுக்குட்டிக்கு பால் கொடுக்கும் காட்சி காண்போரை வியப்பில் ஆழ்த்தியது.
ஒரு விலங்கு இன்னொரு விலங்குக்கு இப்படிப்பட்ட பாசத்தைக் காட்டுவது அரிய செயல் என்பதால் பலரும் இந்த இரு விலங்குகளையும் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
ஐந்தறிவு பிராணியின் ஆறறிவு பாசம்:
பெற்ற குழந்தைக்கு சாப்பாடு கொடுக்காமல் கொடுமைசெய்யும் நிலையும்,தாய் பால் கொடுத்தால் அழகு கெட்டுப் போய்விடும் என்றும் நினைக்கும் ஆறறிவு நிரம்பப் பெற்ற மனிதர்கள் வாழும் உலகில் ஒரு உயிரினத்திற்கு மற்றொரு உயிரினம் தாயுள்ளத்தோடு பால் கொடுப்பது காண்போர் மனதை நெருடத்தான் செய்கிறது.
ஆடுகளின் வீடு:
செங்கோட்டை அருகேயுள்ள காலாங்கரை சங்கரசுப்பிரமணியன் தெருவைச் சார்ந்தவர் முன்னாள் கவுன்சிலர் சுப்பிரமணியன். இவரது மகன் கருப்பசாமி. இவர் தனது வீட்டில் 5க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார்.
நாயின் தாய்ப் பாசம்:
இந்த ஆடுகளின் காவலுக்கு ஒரு பெண் நாயையும் வளர்த்து வருகிறார்.இவர் வளர்க்கும் ஆட்டுக் குட்டி ஒன்று இவர் வீட்டு நாயிடம் தினமும் பால் குடித்து வருகிறது.
வேற்றுமையை வென்ற தாய்மை:
சிலதினங்களுக்கு முன் இவர் எதேச்சையாக வீட்டின் பின்புறம் சென்று பார்த்துள்ளார்.அப்போது தான் இந்த நிகழ்வு நடந்துள்ளது.
அதிசய பிறவிகள்:
அதன் பின் தினமும் அந்த குட்டி ஆடு நாயிடம் பால்குடிப்பது குறித்த தகவல் அப்பகுதி மக்களிடம் செய்தியாக பரவவே ஏராளமானோர் தினமும் இந்த காட்சியை பார்த்து சென்றவண்ணம் உள்ளனர்.