"ஹதாதீலிர் முதைதிதுதொ விஜய காந்தமேவா ஸ்துதே".. "கேப்டனின் புரட்சிப் படை"யின் அதிரடி "ஆக்ஷன் பேஜ்"!!
சென்னை: பேஸ்புக்கில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை வாரி வழித்தெடுத்து கழுவிக் கழுவி ஊற்றுவதைப் பார்த்துக் கொந்தளித்துப் போன தேமுதிகவின் இணையதள நண்பர்கள் இனிமேல் தக்க பதிலடி கொடுக்கப் போகிறோம் என்று கூறியிருந்த நிலையில் தேமுதிக புரட்சிப் படை என்ற பெயரிலேயே ஒரு பேஸ்புக் பக்கம் வந்துள்ளது.
சரிதான், விஜயகாந்த்தின் தீவிர ரசிகர்கள் பதிலடி கொடுக்கக் களம் இறங்கி விட்டார்கள் போல என்று நினைத்து உள்ளே போய் பார்த்தால் பல கருத்துக்கள் "சேம் சைடு கோல்" போலவே தெரிகிறது.
இதனால் இவர்கள் உண்மையிலேயே தேமுதிக ஆதரவாளர்களா அல்லது கிண்லடிப்போர் ஒன்று கூடி சங்கம் வைத்து தனி பக்கம் திறந்து வம்பளக்க வந்துள்ளனரா என்ற சந்தேகமும், குழப்புமுமாக உள்ளது.
நீங்களும் போய் அந்தக் கருத்துக்களையும், பதிலடிகளையும் கொஞ்சம் படிச்சுப் பாருங்க.. உங்களுக்காவது ஏதாவது புரிகிறதா என்று பார்ப்போம்.
வாங்க, இப்ப நிகழ்ச்சிக்குள்ள போவோம்..!
தேமுதிக புரட்சிப் படை
இந்த பேஸ்புக் பக்கத்தின் பெயரே தேமுதிக புரட்சிப் படை என்று வைத்துள்ளனர். பொலி்ட்டிஷியன்.. அதாவது அரசியல்வாதி என்று தங்களை அடையாளம் காட்டியுள்ளனர். அதன் பன்ச் வசனமாவது என்னவென்றால்.. பதிலடி கொடுக்க வந்துட்டோம்டா.. என்பதே.
ஜூலை 5 முதல்
ஜூலை 5ம் தேதி இந்தப் பக்கத்தைத் திறந்துள்ளனர். அதன் பிறகு அவர்கள் போடும் ஒவ்வொரு கருத்தும்.. அப்படியே புல்லரிக்க வைத்துள்ளது. அதற்கு மற்றவர்கள் போடும் பதில் கருத்துக்களோ, மூளையின் செல்களையும் அரிக்கும் வல்லமை படைத்தவை...
வலது காலில் 10 கோல்.. இடது காலில் 10 கோல்!
இது ஒரு கருத்து... 2011 தேமுதிக வின் கூட்டணியால் அதிமுக ஆட்சியை பிடித்தது. 2014 தேமுதிகவுடன் கூட்டணி வைத்ததால் மோடி ஆட்சி பிடித்தார். 2014 தேமுதிகவின் கட்சி கொடியை ஜெர்மன் நாடு தேசிய கொடியாய் வைத்ததால் புட்பால் உலக கோப்பை வெல்ல போகிறது . ஜெர்மன் அணிக்கு கேப்டனின் வாழ்த்துக்கள் . உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் கேப்டன் halftime ல குறைந்தபட்சம் வலது காலில் 10கோல் இடது காலில் 10 கோல் அடிப்பார் .
யாரைச் சொல்றாங்கன்னு தெரியுதா...??
இது அடுத்த கருத்து... நாய்க்கும் நன்றி மறவாமல் இருக்கும் பழக்கம் இருக்க வேண்டுமென அதற்கு நன்றி மறவா பண்பை சொல்லி கொடுக்கும் என் ஆசான தலைவனே உன் சொல் படி கேட்டு அதன்படி நடப்போம் எழுமலையானே . மரியாதை என்ற வார்த்தையின் உருவமே நீ தானே என் அண்ணா. இந்த படத்தில் கேப்டன் கூற வருவது :- அனைவருக்கும் மரியாதை அளிக்க வேண்டும் அது நாயாக இருந்தாலும் சரி!!!!!!
அட நாராயணா....!
இது இன்னொன்று... 7 கோடி தொண்டர்கள் கொண்ட ஒரே கழகம் தேமுதிக என்பதை கர்வத்துடன் பதிவிடுகிறேன் .
நமோ நாராயணா! வீர கஜேந்திரா !!
பெருமாளே...!
இதோ இன்னும் ஒன்று... மோடியை namo (நமோ) என்று அழைக்க காரணம் என்ன?
அட நம்ம தலைவர் எம்பெருமான் கேப்டன் தான் . அவர் ஆசியால் தானே மோடி பிரதமர் ஆனார்.
எம்பெருமான் கேப்டனுக்கு
கோவிந்தா கோவிந்தா
நமோ நாராயணா!
அவங்களே ஆக்கி...!
கேப்டன் 2016ல் முதல்வர் ஆனவுடன் முதல் நடவடிக்கை என்னவென்று குறிப்பிட்ட சில திட்டங்கள் .
1) இந்தியா பாகிஸ்தான் பிரச்சினைக்கு தீர்வு
2) ரயில் கட்டணமின்றி பயணம்.
3) தெருவிற்கு தெரு அரசாங்க மலிவு விலை பெட்ரோல் பங்க் (குழாய் மூலம்)
4) குடும்ப அட்டைக்கு மாதம் 2mw மின்சாரம் அதற்கு மேல் கட்டணம்.
5) பாட்டிலில் அடைத்த இலவச தண்ணீர் குடிமகன்களுக்கு (citizens) க்கு மட்டும்
6) இலவச அரிசி பருப்புக்கு பதிலாக அரசாங்கமே சோறு ஆக்கி அனைவரது வீட்டிற்கும் அனுப்புதல் .
இன்னும் பல திட்டங்கள் மக்களுக்காக . கேப்டன் விஷன் 2016ல்
உள்ளார...டப்பாவில்!
உள்ளார டப்பாவில் வாழ்த்து தெரிவித்த அனைத்து கழக தோழமைகளுக்கு. கேப்டனின் புரட்சி படை சார்பாக நன்றிகளை தெரிவித்துகொள்கிறோம் . என்றும் உங்களுக்கு கேப்டனின் ஆசி கிட்டும் .
ஹதாதீலிர் முதைதிதுதொ விஜய காந்தமேவா ஸ்துதே!
ஹதாதீலிர் முதைதிதுதொ விஜய காந்தமேவா ஸ்துதே
இந்த ஸ்லோகத்தின் பொருள்: வாடி வதங்கி விரக்தியில் தவிப்போரே அண்ணல் விஜயகாந்தை அனுகி அனுகூலம் பெற யாசியுங்கள் என்பதே
பார்த்தீர்களா நண்பர்களே சீனதேசம் போன போதி தருமர் தன் ஏழாம் அறிவால் தீர்க்க தரிசனமாக இவ்வாறு எழுதியுள்ளார்
வாழ்விழந்தோரின் விடியலே! தன்னலம் அறியா தன்மான தமிழனே.
வரும் வராது....!
எங்கள் கேப்டன் தன் சின்னத்தை தேர்ந்தெடுப்பதிலே எவ்வளவு புரட்சி செய்துள்ளார் என்பதை பாருங்கள்
மற்ற சில கட்சி சின்னங்களுடன் இரு ஒப்பீடு
தாமரை - இதில் சத்தம் வராது
உதயசூரியன் - சத்தம் வராது
இரட்டை இலை - சத்தம் வராது
ஆனால்
#முரசு# ஊரே கேட்கும் அளவில் சத்தம் வரும்
இதில் உள்ள கருத்து
மற்ற கட்சி சின்னத்திலே சத்தம் வரவில்லை பின் எப்படி மக்களுக்காக குரல் கொடுப்பாங்க
நீங்கள் முரசு சின்னத்தில் வாக்களித்தால் உங்களுக்காக குரல் எழுப்ப நீங்கள் கேட்பதை எங்கள் ஏழுமலையான் கேப்டன் பெற்று தருவார் .
சிந்திப்பீர்
செயல்படுவீர்
இதுக்கு மேல முடியலைங்க.. முடிஞ்சா நீங்களே போய் ஒரு எட்டு அந்தப் பக்கம் போய்ட்டு வந்துருங்க...!