திமுக 25 தொகுதிகளை கைப்பற்றும்: ஆ.ராசா நம்பிக்கை
பெரம்பலூர்: லோக்சபா தேர்தலில் திமுக 25 இடங்களில் வெல்லும் என்று அக்கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளரும் நீலகிரி லோக்சபா தொகுதியின் வேட்பாளருமான அ.ராசா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஆ.ராசாவின் சொந்த ஊர் பெரம்பலூர் மாவட்டம் வேலூரில் உள்ளது. இங்குள்ள அரசு பள்ளி வாக்கு சாவடியில் இன்று காலை வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
25 தொகுதிகளில் வெற்றி
தமிழகம் முழுவதும் தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் ஆதரவாக வாக்களித்து வருகின்றனர். 25க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தி.மு.க. வெற்றி பெறும். வாக்காளர்களை விலை கொடுத்து வாங்கும் முயற்சியில் அ.தி.மு.க. இறங்கி உள்ளது.
பணப்பட்டுவாடா
எனது நீலகிரி தொகுதியில் ஓட்டுக்கு ரூ.300, ரூ.400, ரூ.1000 என அ.தி.மு.க.வினர் கொடுத்துள்ளனர். அத்திக்கடவு என்ற கிராமத்தில் மக்கள் பணத்தை வாங்க மறுத்ததால் அங்குள்ள கோவில் உண்டியலில் போட்டுவிட்டு சென்றுள்ளனர். தமிழகத்தில் தேர்தல் ஆணையம் செயல்படுகிறதா என்பது தெரியவில்லை என்றார்.
நெல்லை அதிமுக வேட்பாளர்
நெல்லை அதிமுக வேட்பாளர் கே.ஆர்.பி பிரபாகரன், கீழப்பாவூரில் உள்ள நாடார் இந்து மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.