அட்ரஸ் சொல்ல மறுத்த வாலிபரை கத்தியால் குத்திய இருவர்
திருத்தணி: முகவரி சொல்ல மறுத்த வாலிபர் ஒருவரை கத்தியால் குத்திய வழக்கில் இரண்டு பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
திருத்தணி அருகே தாளவேடு காலனியை சேர்ந்தவர் ராஜேஷ் . இவரது நண்பர் முருகம்பட்டு கிராமத்தை சேர்ந்த சுரேஷ் . இவர்கள் இருவரும் நேற்றிரவு முருகம்பட்டு கிராமத்துக்கு பைக்கில் சென்றுள்ளனர். அங்குள்ள விநாயகர் கோயில் முன் சிலர் பேசிக்கொண்டு இருந்துள்ளனர்.
அவர்கள் அருகே பைக்கை நிறுத்திய ராஜேஷ் சத்தமாக ஹாரன் அடித்து சண¢முகம் என்பவரிடம் முகவரி கேட்டுள்ளார். அதற்கு அவர் ‘‘எனக்கு எதுவும் தெரியாது வேறு எங்கேயாவது போய் கேளுங்கள்" என கூறியுள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் திடீரென ராஜேஷ் மற்றும் சுரேஷ் ஆகியோர் தாங்கள் வைத்திருந்த கத்தியை எடுத்து சண்முகம் நெஞ்சில் குத்திவிட்டனர். அவர் ரத்த வெள்ளத்தில் துடித்ததும் பைக்கில் தப்ப முயன்றனர்.
ஆனால் ஊர் மக்கள் இருவரையும் சுற்றிவளைத்து பிடித்து சரமாரியாக தாக்கினர். சண்முகத்தை சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து மக்கள் அளித்த புகாரின் திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷ் மற்றும் ராஜேஷ் ஆகியோரை கைது செய்து திருத்தணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.