9 மதுபான நிறுவனங்களில் சசிகலாவுக்கு பதில் சோ இயக்குனர் ஆனது ஏன்?: ஆம் ஆத்மி கேள்வி
சென்னை: மத்தியில் அம்பானிகளுக்காக பாஜகவும் காங்கிரஸ் கட்சியும் இணைந்து செயல்படுவது போல டாஸ்மாக் வியாபாரத்தில் தமிழகத்தில் அண்ணா திமுக, திமுக கட்சிகள் இணைந்து செயல்படுகின்றன என்று கூறி விரிவான அறிக்கையை ஒன்றை ஆம் ஆத்மி வெளியிட்டுள்ளது.
சென்னையில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் பிரசாந்த் பூஷன் " தமிழ்நாட்டின் கூட்டுச் சதி முதலாளித்துவம்" என்ற தலைப்பில் தமிழிலும் ஆங்கிலத்திலும் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அப்போது ஆம் ஆத்மியின் வேட்பாளர்களையும் அவர் அறிமுகம் செய்து வைத்தார். ஆம் ஆத்மி வெளியிட்டுள்ள அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
ஜெகத்ரட்சகன்
தமிழகத்தில் கடந்த 9 ஆண்டுகாலத்தில் டாஸ்மாக் வருமானமானது ரூ3,639 கோடியில் இருந்து ரூ21,680 ஆக கோடியாக அதிகரித்துள்ளது. டாஸ்மாக் மூலம் திமுக ஆட்சிக் காலத்தில் அக்கட்சியின் எம்.பி. எஸ். ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான எலைட் டிஸ்டல்லரீஸ் நிறுவனமே ஆதாயமடைந்தது. திமுக ஆட்சிக் காலத்தில் 2011-12ல் ரூ712 கோடி வருவாய் ஈட்டியது இந்நிறுவனம். ஆனால் அதிமுக ஆட்சிக் காலத்தில் இந்நிறுவனத்தின் வருவாய் ரூ466 கோடியாக குறைந்தது. இந்த ஜெகத்ரட்சகன்தான் திமுகவின் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
ஜெயமுருகன்
மற்றொரு எஸ்.என்.ஜே. டிஸ்டல்லரீஸ் நிறுவனமானது எஸ்.என். ஜெயமுருகன் என்பவருக்கு சொந்தமானது. இந்த ஜெயமுருகன் தான் கருணாநிதியின் உளியின் ஓசை மற்றும் பெண் சிங்கம் திரைப்படங்களைத் தயாரித்தவர். இந்த நிறுவனத்துக்கு 2008ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில்தான் உரிமம் வழங்கப்பட்டது.
மிடாஸ் நிறுவனம்
அதேபோல் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, இளவரசி ஆகியோரை உரிமையாளர்களாகக் கொண்ட மிடாஸ் நிறுவனம், திமுக ஆட்சியில் ரூ360 கோடி வருவாய் ஈட்டியது. அதே நேரத்தில் அதிமுக ஆட்சிக் காலத்தில் ரூ1077 கோடி வருவாய் ஈட்டியது.
மதுபான நிறுவனங்களில் 'சோ'
சசிகலாவை ஜெயலலிதா அதிமுகவில் இருந்து நீக்கியவுடன் அவருக்கு சொந்தமான 9 நிறுவனங்களின் இயக்குநராக மூத்த பத்திரிகையாளர் சோ நியமிக்கப்பட்டிருக்கிறார். இதில் மதுபான நிறுவனங்கள் 3ம் அடங்கும்.
ஆனால் சசிகலா மீண்டும் அதிமுகவில் இணைந்து கொண்ட பிறகு ஒரே நாளில் சோவும் வெளியேற்றப்படுகிறார். சாராய வியாபாரத்தில் பத்திரிகையாளர் சோ தமக்கு இருக்கும் பங்கு குறித்து தமிழக மக்களுக்கு பதில் சொல்வாரா?
மிடாஸ் நிறுவனங்கள்..
மிடாஸ் நிறுவனத்தின் கீழ் ஹாட் வீல்ஸ் என்ஜினியரிங் நிறுவனம், சிக்னெட் எக்ஸ்போர்ட் நிறுவனம், ஸ்ரீஜெயா நிதி நிறுவனம் ஆகியவை இயங்கி வருகின்றன.
வைகுண்டராஜன்
தாது மணல் எடுக்க 4 ஹெக்டர் பரப்பளவிற்கு மட்டும் அனுமதி வாங்கி அனுமதி இல்லாமல் 30 ஹெக்டர் அளவில் தாது மணல் திருட்டில் வைகுண்டராஜனுக்கு சொந்தமான நிறுவனம் ஈடுபடுவதாக தூத்துக்குடி ஆட்சியர் ஆசிஷ் குமார் அவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு ஆட்சியரை அவசரமாக மாற்றிய அரசு இந்த நிறுவனத்தின் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இவர்தான் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, இளவரசி ஆகியோர் வசமிருக்கும் மிடாஸ் நிறுவனத்தின் முன்னாள் உரிமையாளர். இதனால் தமிழக அரசு வைகுண்டராஜன் மீது கனிமவள கொள்ளை தொடர்பாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
டெல்லியில் பாஜக- காங்கிரஸ் போல..
மத்தியில் பாரதிய ஜனதா அல்லது காங்கிரஸ் அரசு எது அமைந்தாலும் அம்பானி குழுமங்கள் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகத்தான் அவை செயல்படுகின்றன. தமிழகத்தில் அதேபோல் அதிமுகவும் திமுகவும் ஒன்றையொன்று குறைசொல்லாமல் டாஸ்மாக் வியாபாரத்தில் கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றன
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இது ஆம் ஆத்மி ஆலந்தூர் வேட்பாளர் ஞானி சொல்வது...
சோ ராமசாமிக்கும் மது தொழிலுக்கும் உள்ள தொடர்பு புதிதல்ல. அவரது தந்தை ஆத்தூர் சீனிவாசய்யர், சாராய வியாபாரி ராமசாமி உடையார் நடத்திய ஓரியன் கெமிகல்ஸ் என்ற சாராய ஆலையை நிர்வகித்து வந்தார். (இது பற்றி 1989லேயே நான் எழுதியிருக்கிறேன்.) பின்னர் உடையார் ஆரம்பித்த கோல்டன் ஈகிள் சேனலின் நிர்வாகியாக சோ இருந்தார். அந்த சேனலைத்தான் விஜய் மல்லையா வாங்கி விஜய் டிவியாக்கினார். பின்னர் அது ஸ்டார் விஜய் ஆயிற்று என்கிறார் ஆம் ஆத்மி கட்சியின் ஆலந்தூர் சட்டசபை தொகுதி வேட்பாளரான மூத்த பத்திரிகையாளரான ஞாநி சங்கரன்