தயாநிதி மாறனை தகுதி நீக்கம் செய்ய ஆம் ஆத்மி கட்சி கோரிக்கை
சென்னை: மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறனை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென தமிழக தேர்தல் அதிகாரி பிரவீண்குமாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஆம் ஆத்மி கட்சியின் மத்திய சென்னை வேட்பாளர் பிரபாகர் அளித்துள்ள மனுவில், திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மத்திய சென்னை தொகுதியில் 70 லட்ச ரூபாய்க்கும் அதிகமாக செலவு செய்துள்ளதாகக் கூறியுள்ளார்.
எனவே தேர்தல் பார்வையாளரிடம் இருந்து அறிக்கை பெற்று தயாநிதி மாறனை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென அந்த மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதே போல், அதிமுக தரப்பிலும் தயாநிதி மாறன் மீது பிரவீண்குமாரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அந்த மனுவில், ஆயிரம்விளக்கு பகுதியில் தயாநிதிமாறனின் ஆதரவாளர்கள் பணப் பட்டுவாடாவில் ஈடுபட்டதாகவும் அதனை தடுக்க சென்ற அதிமுகவினர் தாக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய சென்னை தேர்தல் பார்வையாளரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.