நகை பறிப்பு: நடிகை திரிஷாவின் கார் டிரைவர் உள்பட 3 பேர் கைது
சென்னை: சென்னை புறநகர் பகுதிகளில், நகை பறிப்பில் ஈடுபட்டு வந்த, நடிகை த்ரிஷாவின் கார் ஓட்டுனர் உள்ளிட்ட 3 வாலிபர்களை, போலீசார் கைது செய்தனர்.
தாம்பரம், சேலையூர், சிட்லப்பாக்கம் பகுதிகளில், தொடர்ந்து, நகை பறிப்பில் ஈடுபட்டு வந்த குற்றவாளிகளை கைது செய்ய, போலீசார் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த நிலையில், சந்தேஷபுரம் பகுதியில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தபோது, பைக்கில் வந்த வாலிபர் ஒருவர், போலீசாரை கண்டதும், அங்கிருந்து தப்பினார்.
சந்தேகமடைந்த போலீசார், அவரின் பைக் எண்ணை பதிவு செய்து விசாரித்ததில், அவர், சென்னீர்குப்பம், மேட்டுத் தெருவை சேர்ந்த குமார், 29, என்பதும், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், நடிகை த்ரிஷாவிடம், கார் ஓட்டுனராக பணிபுரிந்ததும் தெரிந்தது.
அவர், பணி முடிந்தவுடன், சேலையூர், பாரத் நகரை சேர்ந்த விக்னேஷ், 20, ஏ.பி.என்.நகரை சேர்ந்த விவேக், 20, ஆகியோருடன் சேர்ந்து, நகைபறிப்பில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதுவரை, 10 க்கும் மேற்பட்ட பெண்களிடம் நகைகளை பறித்துள்ளனர். மூவரையும் கைது செய்த போலீசார், 30 சவரன் நகை, இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.