காங்கிரஸ் அரசு தமிழை செம்மொழி ஆக்கியது, பாஜக அரசோ இந்தியை திணிக்கிறது: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
நெல்லை: வரும் செப்டம்பர் மாதம் தூத்துக்குடியில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலை திறந்து வைக்கப்படும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் நெல்லையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
சென்னை, திருச்சி, கோவை, மதுரை ஆகிய மாநகரங்களில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புகள் முறையான அனுமதி பெற்று கட்டப்படுகிறதா என்பது பற்றி விசாரணை நடத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட வேண்டும். பல்வேறு இடங்களில் கட்டப்பட்டிருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகள் ஆபத்தான நிலையில் உள்ளன என்று புகார்கள் வந்துள்ளன.
லோக்சபா தேர்தல் தோல்வியை காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொள்கிறது. தமிழகத்தில் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைத்ததால் தான் காங்கிரஸ் தனித்தன்மையை இழந்துள்ளது. 1967ம் ஆண்டில் காமராஜர் ஆட்சியை மீண்டும் கொண்டு வர முடியாமல் ஆனது. கடந்த 2006ம் ஆண்டில் திமுக அமைச்சரவையில் பங்கு பெறாதது காங்கிரஸ் செய்த தவறு.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது. தற்போது பாஜக அரசோ இந்தியை திணிக்க முயல்கிறது. சமஸ்கிருத வாரம் கொண்டாடப் போவதாக அறிவித்துள்ளது. பாதுகாப்பு துறையில் அன்னிய முதலீடு வந்தால் நாட்டின் பாதுகாப்புக்கு அது ஆபத்தை ஏற்படுத்தும்.
ரூ. 369 கோடியில் தாமிரபரணி நதியில் கொண்டு வரப்பட்ட வெள்ளநீர்க் கால்வாய்த் திட்டம் முடங்கிக் கிடப்பது பற்றி மக்கள் பிரதிநிதிகள் அரசிடம் தெரிவித்து அத்திட்டம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வரும் செப்டம்பர் மாதம் தூத்துக்குடியில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலை திறந்து வைக்கப்படும் என்றார்.