என்ன செய்தார், சிதம்பரம் உங்களுக்கு என்ன செய்தார்?: நடிகர் வையாபுரி
சிவகங்கை: மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் ஏதாவது சாதனைகள் செய்திருந்தால் அதை கூறி வாக்கு கேட்க வேண்டியது தானே என்று நடிகர் வையாபுரி கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் செந்தில்நாதனுக்கு ஆதரவாக நடிகர் வையாபுரி தேவகோட்டையில் பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் கூறுகையில்,
சிவகங்கை தொகுதியில் தொடர்ந்து 7 முறை வெற்றி பெற்றாரே சிதம்பரம். அவர் இந்த தொகுதிக்காக என்ன செய்திருக்கிறார். அப்படி ஏதாவது செய்திருந்தால் அதை மக்களிடம் கூறி வாக்கு கேட்க வேண்டியது தானே. அதை எல்லாம் விட்டுவிட்டு நகராட்சியில் தலைவர், துணை தலைவர் மோதல் குறித்து பேசுகிறார். தற்போது உள்ளாட்சிக்கா தேர்தல் நடக்கிறது.
அண்ணன், தங்கை போல் இருப்பவர்களிடையே சிறு கருத்து வேறுபாடு ஏற்படத் தான் செய்யும். அது சில நாட்களில் சரியாகிவிடும். காங்கிரஸில் உள்ள கோஷ்டி பூசலை தீர்க்க முடியவில்லை. செய்த சாதனைகள் ஏதாவது இருந்தால் சிதம்பரம் அதை பற்றி பேசட்டுமே என்றார்.