பொன்முடி ஊருக்குள் புகுந்து அவரைத் திட்டிப் பிரசாரம்.. வையாபுரி, தியாகு மீது கல்வீச்சு!
விழுப்புரம்: விழுப்புரம் தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜேந்திரனை ஆதரித்து நடிகர்கள் தியாகு, வையாபுரி ஆகியோர் பேசியபோது முன்னாள் அமைச்சர் பொன்முடியை திட்டிப் பேசினர். இதனால் ஆத்திரமடைந்த திமுகவினர் கல்வீசித் தாக்கினர்.
கல் தங்கள் மீது படாமல் டக்கென்று குனிந்து தப்பினர் இருவரும். ஆனால் அருகில் நின்ற ஒருவர் மண்டை மீது கல் பட்டு அவருக்கு ரத்தம் கொட்டியது. இதற்கு மேல் இருந்தால் தலை தப்பாது எனறு பயந்து தியாகுவும், வையாபுரியும் இடத்தைக் காலி செய்து விட்டு வேகமாக போய் விட்டனர்.
இந்த சம்பவத்தால் கூட்டம் பாதியிலேயே பணால் ஆகி கலைந்து போய் விட்டது.
திருவெண்ணெய் நல்லூர்
வேட்பாளர் ராஜேந்திரனை ஆதரித்து விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் நடிகர்கள் தியாகு, வையாபுரி ஆகியோர் நேற்று முன்தினம் திறந்தவேனில் சென்று பிரசாரம் செய்தனர்.
பொன்முடி ஊரில்
அப்போது அவர்கள் சித்தலிங்கமடம், புதுப்பாளையம் உள்ளிட்ட இடங்களில் பிரசாரத்தை முடித்து விட்டு, தி.மு.க. மாவட்ட செயலாளர் பொன்முடியின் சொந்த ஊரான டி.எடையார் கிராமத்துக்கு சென்றனர்.
சொத்தைப் பற்றிப் பேசினால்...
அங்கு அவர்கள் பிரசாரம் செய்யும் போது, சாதாரண ஆசிரியராக இருந்த பொன்முடி அரசியலுக்கு வந்து ஊழல் செய்து பல கோடி ரூபாய் சொத்து சேர்த்து வைத்துள்ளார் என்று பேசியதாக கூறப்படுகிறது.
டக்கென்று குனிந்து எஸ்கேப்..
அந்த சமயத்தில், கூட்டத்தில் இருந்து, நடிகர்கள் தியாகு, வையாபுரி ஆகியோரை நோக்கி கல் வீசப்பட்டது. இதை கவனித்த இருவரும் கீழே குனிந்து கொண்டனர்.
கலியபெருமாள் மண்டை காலி
அதனால், அவர்கள் அருகில் இருந்த ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் கலியபெருமாள் (37) என்பவர் தலை மீது கல் விழுந்தது. இதில் அவரது தலையில் காயம் ஏற்பட்டு, ரத்தம் கொட்டியது, வலியால் துடித்த அவரை 108 ஆம்புலன்சில் ஏற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போதுமய்யா பிரசாரம்
இந்த சம்பவத்தை தொடர்ந்து நடிகர்கள் தியாகுவும், வையாபுரியும் பிரசாரத்தை முடித்துக்கொண்டு அவசரம், அவசரமாக அங்கிருந்து வேனில் புறப்பட்டுச்சென்றனர்.
நடனசிகாமணி ஆளுங்க வேலைதான்
கல்வீச்சு சம்பவம் குறித்து கலியபெருமாள் திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரில், முன்னாள் அமைச்சர் பொன்முடியின் சகோதரர் நடனசிகாமணியின் ஆதரவாளர்கள் கல்வீசியதாக கூறியிருந்தார். அதன் பேரில் நடனசிகாமணியின் ஆதரவாளர்கள் 10-க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.