"அம்மா" வீடு முதல் அதிமுக ஆபீஸ் வரை.. குண்டு ஆர்த்தி முதல் நிர்மலா வரை.... மனிதச் சங்கிலியாக!
சென்னை: அதிமுக தலைமைக் கழகத்திலிருந்து தொடங்கி, ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு வரை மனிதச் சங்கி்லியாக நின்று அதிமுகவினர் இன்று போராட்டம் நடத்தினர்.
ஜெயலலிதாவுக்கு ஆதரவாக இன்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் விதம் விதமான போராட்டங்கள் நடந்தன. உண்ணாவிரதம், மனிதச் சங்கிலி, ஆர்ப்பாட்டம் என இவை நடந்தன.
இன்றுடன் ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டு 5 நாள் ஆவதால் அதிமுகவினர் சோகத்துடன் காணப்படுகிறார்கள்.
மனிதச் சங்கிலி
இன்று அதிமுக தகவல் தொழில் நுட்ப பிரிவு நிர்வாகிகள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினார்கள். ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகம் அருகே இருந்து போயஸ் கார்டன் வரை கைகளை கோர்த்தபடி மனித சங்கிலியாக நின்றனர்.
மேயர் சைதை துரைசாமி
இந்தப் போராட்டத்தை சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி தொடங்கி வைத்தார்.
மக்கள் என்றென்றும் உங்களுடன்
இந்த மனித சங்கிலியில் மாணவ-மாணவிகள் மற்றும் தகவல் தொழில் நுட்ப அணி நிர்வாகிகள், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, மியூசிக் அகாடமி வழியாக போயஸ் கார்டன் வரை கைகளை கோர்த்தபடி நின்றனர். அதில் நின்றவர்கள் ஜெயலலிதா உருவம் பொறித்த பதாகைகளில் மக்கள் என்றென்றும் உங்களுடன் என்ற வாசகத்தை ஏந்திச் சென்றிருந்தனர்.
குண்டு ஆர்த்தி... நிர்மலா பெரியசாமி
இந்த போராட்டத்தில் நடிகர் அஜய் ரத்னம், நடிகைகள் சி.ஆர்.சரஸ்வதி, குண்டு ஆர்த்தி, திருநங்கை ரோஸ், டி.வி. தொகுப்பாளர் நிர்மலா பெரியசாமி் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
ஜெ.வுக்கு வாழ்த்து.. சாமிக்கு ஏச்சு!
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஜெயலலிதாவை வாழ்த்தியும், சுப்பிரமணியன் சாமிக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினார்கள்.
தமிழகம் முழுவதும்
இதேபோல தமிழகம் முழுவதும் ஆங்காங்கே உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், மனிதச் சங்கிலி என போராட்டங்கள் தொடர்ந்தன. ஜெயலலிதா ஜாமீனில் விடுதலைாகி வரும் வரை போராட்டங்கள் தொடரும் என்று ஏற்கனவே அதிமுக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.