கோட்டை விட்டுடக் கூடாதே... உஷாராகும் ஸ்ரீரங்கம் அதிமுக
திருச்சி: ஜெயலலிதாவின் கைது காரணமாக காலியாகியுள்ள ஸ்ரீரங்கம் சட்டசபைத் தொகுதிக்கு இடைத் தேர்தல் வரவுள்ள நிலையில் அங்கு பெரும் வெற்றியைப் பெற்று மக்கள் ஜெயலலிதாவின் பக்கம்தான் இன்னும் உள்ளனர் என்பதை நிரூபிக்க அதிமுக உறுதி பூண்டுள்ளதாம்.
இதனால் ஸ்ரீரங்கம் தொகுதியில் இப்போதே வேலைகளை முடுக்கி விட ஆரம்பித்துள்ளதாம் அதிமுக.
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது ஸ்ரீங்கத்திற்கு அறிவிக்கப்பட்ட அனைத்துத் திட்டங்களையும் முழுமையாக செய்து முடிக்கவும் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாம்.
ஜெயலலிதாவின் செல்லத் தொகுதி
ஜெயலலிதாவின் செல்லத் தொகுதியாக கவனிக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வந்தது ஸ்ரீரங்கம். இந்தத் தொகுதிக்காக முதல்வராக பதவியேற்ற முதல் நாளிலிருந்தே ஏகப்பட்ட திட்டங்களை அறிவித்து வந்தார் ஜெயலலிதா.
5 முறை விசிட்
மேலும் தனது பதவிக்காலத்தின்போது 5 முறை தொகுதிக்கும் வந்து போயிருந்தார். நலத் திட்டங்களையும் நேரில் தொடங்கி வைத்தார்.
ரூ. 2185 கோடி குவிப்பு
ஜெயலலிதாவின் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு மட்டும் கிட்டத்தட்ட 5200 திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ. 2185 கோடியாகும்.
பதவி போச்சு
இப்படிப் பார்த்துப் பார்த்து கவனித்த தொகுதியை தற்போது ஜெயலலிதா இழந்துள்ளார். சிறைக்குப் போய் விட்டார். இதனால் அதிமுகவினர் சோர்ந்து போயுள்ளனர்.
கோட்டை விடக் கூடாது
இருந்தாலும் இங்கு இடைத் தேர்தல் வரும்போது எந்தவித சுணக்கமும் இல்லாமல் தொகுதியை மீண்டும் கைப்பற்றும் வகையில் அதிமுகவினர் இப்போதே சுறுசுறுப்பாகி வருகிறார்களாம்.
திட்டங்களை முடிங்க
முதலில் அறிவித்த திட்டங்களை இடைத் தேர்தலுக்குள் முடிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாம். இதனால் அதிகாரிகளை வைத்து வேலைகளை விரைவுபடுத்தி வருகிறதாம் அதிமுக அரசு.
பார்க்கலாம், ரங்கநாதர் யாருக்கு அருள் பாலிக்கப் போகிறார் என்று.