அப்பாடா... தூத்துக்குடி மேயர் தேர்தலில் ஜாஸ்தி வாக்குகளில் வென்ற அதிமுக...கட்சியினர் நிம்மதி!
சென்னை: உள்ளாட்சி இடைத் தேர்தலில் கடந்த முறையைப் போல இல்லாமல், இந்த முறை பாஜக மட்டுமே களத்தில் இருந்ததால், கடந்த முறை வாங்கியதை விட அதிக அளவிலான வாக்குகளை அதிமுக பெறாவிட்டால் அந்தந்தப் பகுதி அதிமுக அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்.பி, எம்.எல்.ஏக்களின் கட்சிப் பதவிக்கு வேட்டு வைக்கப்படலாம் என்ற அச்சம் நிலவி வந்த நிலையில் தற்போது தூத்துக்குடி மேயர் இடைத் தேர்தலில் கடந்த முறையை விட கூடுதலான வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.
இந்த முறை சுத்தமாக போட்டியே இல்லை. பாஜக மட்டுமே தேர்தல் களத்தில் உள்ளது. திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் தேர்தலைப் புறக்கணித்து விட்டன.
எனவே கடந்த முறை வாங்கியதை விட அதிக அளவிலான வாக்குகளைப் பெற வேண்டும் என்று அதிமுகவினருக்கு மேலிடத்திலிருந்து உத்தரவுகள் போயிருந்ததாக கூறப்பட்டது. இதனால்தான் இடைத் தேர்தல்தானே என்று அலட்சியமாக இல்லாமல் அதிமுகவினர் படு தீவிரமாக களப் பணியாற்றியிருந்தனர்.
முயற்சியில் வென்ற நெல்லை
இதனால் பல இடங்களில் அதிமுகவை போட்டியின்றி வெல்ல வைக்க பல முயற்சிகளில் கட்சியினர் இறங்கினர். இதனால் நெல்லை மாநகராட்சி பாஜக வேட்பாளர் வெள்ளையம்மாள் பல்டி அடித்து அதிமுகவுக்கு ஆதரவாக மாறினார். இதனால் அங்கு போட்டியின்றி அதிமுக வென்றது.
தூத்துக்குடி ஜஸ்ட் மிஸ்!
ஆனால் தூத்துக்குடியில் அதிமுகவினர் கோட்டை விட்டு விட்டனர். அங்கு பாஜக வேட்பாளர் ஜெயலட்சுமி விலை போக மறுத்து விட்டதால் போட்டி நடப்பது உறுதியாகி வாக்குப்பதிவும் நடந்தது. தற்போது ஜெயலட்சுமி அதிக வாக்குகளைப் பெற்று விடக் கூடாதே என்ற பதைபதைப்பில் அதிமுகவினர் இருந்து வந்தனர்.
நல்லவேளை தப்பித்தார் கிரேஸி
இந்த நிலையில் இன்று நடந்த வாக்கு எண்ணிக்கையில், அதிமுக வேட்பாளர் அந்தோணி கிரேஸி, பாஜக வேட்பாளர் ஜெயலட்சுமியை விட 84,885 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இது கடந்த தேர்தலை விட அதிக வாக்கு வித்தியாசமாகும்.
கடந்த முறை
கடந்த மேயர் தேர்தலில் அதிமுக வேட்பாளர் சசிகலா புஷ்பா, தி.மு.க. வேட்பாளர் பொன் இனிதாவைவிட 21 ஆயிரத்து 256 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இந்த முறை அதை தாண்டியுள்ளார் கிரேஸி. கடந்த தேர்தலை விட அ.தி.மு.க.வுக்கு 53 ஆயிரத்து 543 ஓட்டுகள் அதிகம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கோவையிலும் அசத்தல்
இதேபோல கோவையிலும் வாக்கு வித்தியாசம் தாண்டியுள்ளது. கடந்த முறையை விட இந்த முறை சூப்பரான வாக்கு வித்தியாசத்தில் அங்கு அதிமுக வென்றுள்ளது.
செம ஜாஸ்தி...!
கடந்த மேயர் தேர்தலில் கோவையில், அதிமுக வேட்பாளர் செ.ம. வேலுச்சாமி 1.27 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். ஆனால் தற்போதைய தேர்தலில் அதிமுக வேட்பாளர் கணபதி ப.ராஜ்குமார் 2 லட்சத்து 91 ஆயிரத்து 334 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று அசத்தியுள்ளார்.
மக்களிடம் ஆர்வம் இல்லை
கோவையில் மட்டுமல்லாமல் பிற பகுதிகளிலும் கூட வாக்குப் பதிவு குறைவாகவே இருந்தது. இதற்குக் காரணம், மக்களிடம் இந்தத் தேர்தல் குறித்து ஆர்வம் இல்லாமல் போனதுதான்.
கிராமங்களில் 67.99 சதவீதம்
உள்ளாட்சி இடைத் தேர்தலில் கிராமப்புறங்களில் 67.99 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. நகர்ப்புறங்களில் அதை விட குறைவாக அதாவது 63.57 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. இதுதான் அதிமுகவை கவலைக்குள்ளாக்கியுள்ளது.