ஒரே நேரத்தில் மனைவி, மாமியாருடன்.... வெட்டிக் கொல்லப்பட்ட காண்டிராக்டர்.. பெண் உள்பட 5 பேர் கைது
சென்னை: தனது மனைவி மற்றும் மாமியாருடன் தகாத உறவு வைத்திருந்த அதிமுக பிரமுகரான பிளம்பிங் காண்டிராக்டரை கொலை செய்துள்ளார் ஒரு நபர். இந்தக் கொலையில் அவருக்கு உடந்தையாக இருந்ததாக அவரது அக்காள் உள்பட 4 பேரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை மேடவாக்கம் பெரியார் தெருவை சேர்ந்தவர் தசரதன் (36). அ.தி.மு.கவில் இருந்து வந்தார். மேலும் பிளம்பிங் காண்டிராக்டராகவும் இருந்து வந்தார். இவருக்கு கஸ்தூரி (30) என்ற மனைவியும், சுமன்(10) என்ற மகனும் உள்ளனர். கடந்த 16ம் தேதி தசரதன் படப்பையிலிருந்து வண்டலூர் நோக்கி தனது பைக்கில் சென்று கொண்டிருந்த போது 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார்.
இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் சத்யசீலன், ஜோஸ்வா ஆகியோர் பொன்னேரி கோர்ட்டில் சரணடைந்தனர். அவர்களை போலீஸார் காவலில் எடுத்து விசாரித்தபோது சத்யசீலனின் அக்காள் மைதிலி என்பவருக்கும் இக்கொலையில் தொடர்பு இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரைப் போலீஸார் கைது செய்தனர்.
விசாரணையில் சத்யசீலன் கொடுத்த வாக்குமூலத்தில்....
நானும், கே.கே.நகர் சண்முகப்பிரியாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டோம். இதில் சண்முகப்பிரியாவின் அம்மா கோட்டீஸ்வரியுடன் தசரதன் கள்ள தொடர்பு வைத்திருந்தார். இதனை நான் கண்டித்தேன். ஆனால் தசரதன் அதைக் கண்டுகொள்ளவில்லை. கோட்டீஸ்வரியும் கண்டு கொள்ளவில்லை.
இதையடுத்து எனது மனைவி மற்றும் அவரது தங்கை அனுப்பிரியாவை அழைத்துக் கொண்டு தனி குடித்தனம் சென்றேன். இதை எனது மனைவி விரும்பவில்லை. என்னுடன் சண்டை பிடித்தார். பின்னர் என்னை விட்டுப் பிரிந்து போனார்.
அதன் பின்னர்தான் எனது மனைவியுடனும் தசரசதன் தொடர்பு வைத்தது தெரிய வந்தது. ஒரே சமயத்தில் எனது மனைவி மற்றும் மாமியாருடன் தசரசதன் தொடர்பு வைத்திருந்தார். இதை நானும், எனது அக்காள் மைதிலியும் பலமுறை நேரில் பார்க்கவும் நேர்ந்தது.
இதையடுத்து தசரதனைக் கொல்ல முடிவு செய்து கொலை செய்தோம் என்றார் சத்யசீலன்.
இந்தக் கொலை வழக்கில் தொடர்புடைய கிரீஷ், ராஜ்குமார் ஆகியோரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.