முதல்வரை சந்தித்த வேணுகோபால் எம்.பி: வாழ்த்து பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவை, நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் பி. வேணுகோபால் மற்றும் தலைமைச் செயலாளர் நிலைக்கு பதவி உயர்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
முதல்வர் ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில், டாக்டர். பி.வேணுகோபால், எம்.பி., நாடாளுமன்ற ஊரக வளர்ச்சி நிலைக் குழுத் தலைவராக பொறுப்பேற்பதற்கு முன்பு சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
புதிதாக அமைந்த லோக்சபாவில், எம்.பி.க்களின் எண்ணிக்கை அடிப்படையில் நாடாளுமன்ற நிலைக்குழுக்களுக்கான தலைவர் பதவிகள் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
இதில் இருஅவைகளிலும் சேர்த்து அதிக உறுப்பினர்களைக் கொண்ட பாஜகவுக்கு 11 நிலைக் குழுக்களின் தலைவர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளன.
இதற்கு அடுத்தபடியாக, 113 உறுப்பினர் களைக் கொண்ட காங்கிரஸ் கட்சிக்கு ஐந்து குழுக்களுக்கான தலைவர் பதவியும், 46 எம்பிக்களைக் கொண்ட திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு நிலைக் குழுக்களின் பதவிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
திரிணமூல் காங்கிரஸைவிட இரண்டு எம்பிக்கள் கூடுதலாக (48) இருந்தபோதும் அதிமுகவைச் சேர்ந்த திருவள்ளூர் தொகுதி எம்.பி.யான டாக்டர் பி.வேணுகோபாலுக்கு கிராமப்புற மேம்பாடு நிலைக்குழு தலைவர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வாழ்த்து
முதல்வர் ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில், 1981-ம் ஆண்டில் பணியில் சேர்ந்த இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் முனைவர் கிரிஜா வைத்தியநாதன், முனைவர் ரா.கண்ணன், திரு.கே.கணேசன், திரு. அசோக்குமார் குப்தா, திரு.ராஜீவ் நயன் செளபே ஆகியோர் தலைமைச் செயலாளர் நிலைக்கு பதவி உயர்வு பெற்றதையொட்டி சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.